ஐந்து வருடங்களுக்கு முன்னர் பேலியகொட பொலிஸ் நிலையத்தினுள் வைத்து சட்ட மாணவர் ஒருவரைப் பயங்கரமாகத் தாக்கி, சித்திரவதைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் பேலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) பிரதம பொலிஸ் பரிசோதகர் லின்டன் சில்வா உள்ளிட்ட நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று உத்தியோகபூர்வமாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் இந்தக் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.
முன்னாள் ஓ.ஐ.சி லின்டன் சில்வாவுக்கு மேலதிகமாக, ஜெயகொடி ஆரச்சிகே சுமித் குமார சோமரத்ன, திஸாநாயக்க முதியான்சலாகே நதுன் தாரக மதுரங்க அபேகோன் மற்றும் பாபகொட ஆரச்சிகே அதுல விஜேசிங்க ஆகிய பொலிஸ் அதிகாரிகளுக்கே இவ்வாறு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் மேல் மாகாண ஆளுநரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான மைத்ரி குணரத்னவின் இளைய மகனான சட்ட மாணவர் மிகார குணரத்ன என்பவரே இந்தத் தாக்குதலுக்குள்ளானவராவார். குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக, தண்டனைச் சட்டக் கோவையின் 32ஆம் பிரிவு மற்றும் 1994 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சித்திரவதைகளுக்கு எதிரான சாசனச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரினால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
வழக்கின் பின்னணி: கடந்த 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி 25 ஆம் திகதி, பேலியகொட பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி சட்டத்தரணியின் வாடிக்கையாளரான சஷிக ஜயவீர என்பவருக்கு மதிய உணவு வழங்குவதற்காக மிகார குணரத்ன அங்கு சென்றுள்ளார். அந்தச் சமயத்தில், காவலில் இருந்த நபரிடம் பொலிஸார் வலுக்கட்டாயமாக வாக்குமூலம் பெற முயன்றதாகக் கூறப்படுகிறது. இதன் போது ஏற்பட்ட தர்க்கம் மோதலாக மாறிய நிலையில், பொலிஸ் அதிகாரிகள் குறித்த சட்ட மாணவரை அநாகரிகமான முறையில் தாக்கி, சித்திரவதைக்கு உள்ளாக்கியதாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் காரணமாகத் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து மிகார குணரத்ன பின்னர் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அம் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், அப்போதைய பொறுப்பதிகாரி லின்டன் சில்வா உள்ளிட்ட சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளும், அரசாங்கமும் தங்களது சொந்த நிதியிலிருந்து மனுதாரருக்கு நட்டஈடு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்திருந்தது.
இந்நிலையில், இந்த மேல் நீதிமன்ற வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.