அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே, சிறைச்சாலையில் நிர்வாணமாக்கப்பட்டு அத்துமீறிய உடல் சோதனைக்கு (Deep Invasive Search) உட்படுத்தப்பட்டதை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முதன்முறையாக உத்தியோகபூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளதாக அவரது மனைவி மனோரி சலே குற்றஞ்சாட்டியுள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடைபெற்ற விசாரணை ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மனோரி சலே, தனது கணவரை சிறை அறையிலிருந்து வெளியே அழைத்து வந்து, பிறர் முன்னிலையில் அவரது ஆடைகளைக் களைந்து, விலங்கிடப்பட்ட நிலையில் மலக்குடல் பரிசோதனை உள்ளிட்ட அத்துமீறிய ஆழமான உடல் சோதனைக்கு உட்படுத்தியதை சி.ஐ.டி உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
கடந்த மார்ச் 8ஆம் திகதி இச்சம்பவம் நடந்ததிலிருந்து சி.ஐ.டி இந்த உத்தியோகபூர்வக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வந்தது. எனினும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அண்மைய அமர்வில் கலந்துகொண்ட சி.ஐ.டி அதிகாரிகள், இந்த நடைமுறையை உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளனர். இதனையடுத்து, குறித்த தேடுதலுடன் தொடர்புடைய கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகள், சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் இதற்கான உத்தியோகபூர்வ சுற்றுநிருபங்கள் ஆகியவற்றைச் சமர்ப்பிக்குமாறு சி.ஐ.டிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
“சுரேஷ் சலே ஆரம்பத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, சட்டவைத்திய அதிகாரி (JMO) மூலம் பரிசோதிக்கப்பட்ட போது அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார். அவர் ஒரு விசேட ‘தண்டனை அறைக்கு’ மாற்றப்பட்ட பின்னரே, இத்தகைய கடுமையான சோதனைகளும் சித்திரவதைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன” என மனோரி சல்லே தெரிவித்தார்.
அவரது தற்போதைய தடுப்புக்காவல் நிலைமைகள் குறித்து விவரித்த அவர், தனது கணவர் எவ்வித காற்றோட்டமும் இல்லாத 6×4 அடி அளவுடைய மிகச் சிறிய அறையொன்றில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். ஒரு வகையான உளவியல் சித்திரவதையாக 24 மணி நேரமும் அந்த அறையில் மின்விளக்கு எரியவிடப்பட்டுள்ளதுடன், முதல் 40 நாட்களுக்கு அவர் வெற்று சிமெந்து தரையிலேயே தூங்கக் கட்டாயப்படுத்தப்பட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.
அவ் வளாகம் எலிகள் தொல்லை மிகுந்ததாகக் காணப்படும் அதேவேளை, அதே தளத்தில் இருந்த வேறு சில கைதிகள் எலி கடித்ததால் அவசர மருத்துவ ஊசிகளைப் பெற வேண்டியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், மலசலகூடத்திற்கு மிக அருகில் இந்தச் சிறை அறை அமைந்துள்ளதால், அங்கிருந்து வரும் கடுமையான துர்நாற்றம் காரணமாகத் தனது கணவரின் நாள்பட்ட ஒற்றைத்தலைவலி (Migraine) நோய் மேலும் தீவிரமடைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
தற்போதைய நிலையில் சுரேஷ் சலே உணவு மற்றும் திரவ உணவுகளை உட்கொள்ள மறுத்து வருவதால், ஊசி மூலம் உட்செலுத்தப்படும் (Intravenous) குறைந்தபட்ச திரவங்கள் மூலமே மருத்துவப் பணியாளர்கள் அவரது உயிரைத் தக்கவைத்துள்ளனர். அவர் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதாகவும், பேசுவதற்குக் கடுமையான சிரமத்தை எதிர்கொள்வதுடன், நீண்ட நேரம் நிமிர்ந்து உட்கார முடியாமலும், கைகளில் நீண்ட நாட்களாக ஊசிக்குழாய் (Cannula) பொருத்தப்பட்டிருப்பதால் கைகளில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது மனைவி விவரித்தார்.
இவ் மனித உரிமை மீறல்கள் குறித்து விவரித்து, இதில் தலையிடுமாறு கோரி ஜனாதிபதிக்கு தான் இரண்டு முறை கடிதம் எழுதியுள்ள போதிலும், இதுவரை அரசாங்கத் தரப்பிலிருந்து தமக்கு எந்தவொரு உத்தியோகபூர்வ பதிலும் அல்லது கடிதம் கிடைத்ததற்கான அங்கீகாரமோ கிடைக்கவில்லை என்றும் மனோரி சல்லே மேலும் தெரிவித்தார்.