முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (17) காலை அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் வழங்குமாறு விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணைக்கு (Summons) இணங்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் இன்று காலை அவர் முன்னிலையாகியிருந்தார். இதனைத் தொடர்ந்தே அவர் உத்தியோகபூர்வமாகக் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த விசாரணைக்காக நேற்று (16) ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு யோஷித ராஜபக்சவுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நீதிமன்ற வழக்கு ஒன்றில் கலந்துகொள்ள வேண்டியிருந்ததால் நேற்றைய தினம் சமூகமளிக்க முடியாது என அவர் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார். இதனையடுத்து, இன்றைய தினம் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட உத்தரவின் பேரில் வருகை தந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யோஷித ராஜபக்சவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன?
லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின்படி, யோஷித ராஜபக்சவுக்கு எதிராகப் பிரதானமாக இரண்டு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன:
-
கடற்படை ஆட்சேர்ப்புக்கான அடிப்படைத் தகைமை மோசடி: இலங்கை கடற்படையில் கெடட் அதிகாரியாக (Cadet Officer) இணைந்துகொள்வதற்கான நிலையான தகைமையாக, உயர்தரப் பரீட்சையில் (A/L) விஞ்ஞானம் அல்லது கணிதப் பிரிவில் சித்தியடைந்திருக்க வேண்டும் என்பதே விதியாகும். எனினும், யோஷித ராஜபக்ச உயர்தரத்தில் கலைப்பிரிவிலேயே (Arts Stream) கல்வி கற்றுள்ளார். இதனால், கடற்படை பதவிக்குத் தேவையான ஆரம்ப அடிப்படைத் தகைமைகளை அவர் கொண்டிருக்கவில்லை என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
-
பிரித்தானிய அரச கடற்படை அகாடமி நிதி முறைகேடு: கடந்த 2006 செப்டெம்பர் மாதத்தில், அன்றைய கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, பிரித்தானிய அரச கடற்படை அகாடமிக்கு (British Royal Naval Academy) யோஷித ராஜபக்சவை அங்கு இணைத்துக்கொள்ள முடியுமா என வினவி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதற்கு அகாடமி சம்மதம் தெரிவித்த போதிலும், முழுமையான கல்விப்புலமைப் பரிசில் (Full Scholarship) அடிப்படையில் இதனை வழங்க முடியாது என்றும், இதற்கான கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்த வெளிநாட்டுப் பயிற்சிக்கான நிதியுதவிகள் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்பட்ட விதம் தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது.