உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளில் விளையாடுவதற்காக, கானா நாட்டின் நடுகள ஆட்டக்காரர் (Midfielder) தாமஸ் பார்டேயை (Thomas Partey) கனடாவிற்குள் அனுமதிப்பதற்கான கானா அரசின் முயற்சி இன்று காலை அந்நாட்டு பெடரல் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
இங்கிலாந்தில் பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணையை எதிர்கொண்டுள்ள பார்டேவுக்கு கனடா நுழைவு விசா மறுத்திருந்த நிலையில், அந்த முடிவை ரத்து செய்யக் கோரும் இடைக்காலத் தடை மனுவை (Injunction application) நீதிபதி ஒருவர் இன்று விசாரணை செய்யவுள்ளார்.
32 வயதான தாமஸ் பார்டே, பிரிட்டனில் 7 வன்புணர்வு குற்றச்சாட்டுகளையும் ஒரு பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டையும் எதிர்கொண்டுள்ளார். இதனால் கனடாவிற்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, அவர் தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ளார். டொராண்டோவில் புதன்கிழமை நடைபெறவுள்ள பனாமாவுக்கு எதிரான கானாவின் ஆரம்பப் போட்டியில் அவரால் பங்கேற்க முடியாமல் போயுள்ளது.
கனடா அரசின் இந்த முடிவு “மிகவும் அநீதியானது” என்று கூறியுள்ள கானா அரசாங்கம், இதற்கு எதிராக நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தப் போவதாக உறுதியளித்துள்ளது.
இரண்டு பெண்களுடன் தொடர்புடைய ஐந்து வன்புணர்வு குற்றச்சாட்டுகளையும், மற்றொரு பெண்ணுடன் தொடர்புடைய ஒரு பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டையும் பார்டே எதிர்கொண்டுள்ளார். மேலும் இரண்டு கூடுதல் வன்புணர்வு குற்றச்சாட்டுகளுக்கு தாம் குற்றவாளி அல்ல என வாதிட உத்தேசித்துள்ளதாக அவரது சட்டத்தரணி கடந்த மார்ச் மாதம் தெரிவித்திருந்தார்.
குடிவரவு முடிவுகள் ஒவ்வொரு வழக்கின் பின்னணியையும் பொறுத்து தனித்தனியாக எடுக்கப்படுபவை என்றும், உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்துவதால் நாட்டின் குடிவரவுச் சட்டங்களில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் கனடா தரப்பு தெரிவித்துள்ளது.