உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு, அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அவர் அனைத்துத் தகவல்களையும் வெளிப்படுத்துவதன் மூலம் இந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்;
“முன்னாள் புலனாய்வு மற்றும் இராணுவ அதிகாரி என்ற வகையில், சுரேஷ் சல்லே இந்த விசாரணைக்கு உதவக்கூடிய எந்தவொரு தகவலையும் விசாரணை அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும். தகவல்களை மறைத்து வைப்பதில் எந்தப் பயனும் இல்லை. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தமக்குத் தெரிந்தவற்றை வெளிப்படுத்தி, பாதுகாப்புப் பிரிவினருக்கு உதவுவதே சுரேஷ் சல்லே செய்யக்கூடிய சிறந்த காரியமாகும்”
என அமைச்சர் குறிப்பிட்டார்.
சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் ஜயதிஸ்ஸ;
அவருக்கு என விசேட சிறைச்சாலை அறையோ அல்லது தனிப்பட்ட வசதிகளோ வழங்கப்படவில்லை என்றும், தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்குப் பயன்படுத்தப்படும் நிலையான நடைமுறைகளே அவருக்கும் பின்பற்றப்படுவதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், அவருக்குத் தேவையான மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், உறவினர்கள் அவரைப் பார்வையிடவும், உணவு வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதோடு, தேவைப்படும்போது தாமதமின்றி மருத்துவச் சிகிச்சைகளும் வழங்கப்படுவதாகக் கூறினார்.
மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, கடந்த கால வழக்கமான நடைமுறைகளைப் போன்றே நிலையான தடுப்புக்காவல் ஏற்பாடுகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளார் என்பதை விவரித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, அவரது உடல்நிலை மற்றும் நலன்புரிச் செயற்பாடுகளை சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறையினர் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் மேலும் தெரிவித்தார்