தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலேவுக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநீதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வழிகள் திறந்தே காணப்படுகிறது. எனினும் அதற்கு அவர் முதலில் உயிருடன் இருக்க வேண்டியது அவசியமென்பதால் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திபபை ஏற்பாடு செய்து அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு முன்னெடுக்கப்படும் விசாரணைகள், தற்போதைய அரசியல் சூழலில் தேவையற்ற ஒரு குழப்பத்தையே தோற்றுவித்துள்ளது. இந்தமுழு விவகாரமும் தற்போதைய நிலையில் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதுடன், பிரதான ஊடகங்கள் அனைத்தும் இதையே முதன்மைப் படுத்திச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
சலே தொடர்பில் நாட்டில் இருவேறு அரசியல் கருத்துக்கள் மோதிக்கொள்வதை நாம் காண்கின்றோம். கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிப் பீடம் ஏற்றுவதற்காகவே சுரேஷ் சலேயின் வழிநடத்தலில் உயிர்த்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். மறுபுறத்தில், கோட்டாபய ராஜபக்ஷவை இவ்விவகாரத்தில் சிக்க வைப்பதற்காகவே சலே கைது செய்யப்பட்டுள்ளதாக மற்றுமொரு தரப்பினர் வாதிடுகின்றனர்.
சுரேஷ் சலே என்பவர் நாட்டின் ஒரு முக்கிய இராணுவ அதிகாரி என்பதை நாம் அறிவோம். கடந்த காலங்களில் எத்தனையோ முக்கிய இராணுவ அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், தண்டனைகளுக்கும் முகம் கொடுத்துள்ளனர். அவ்வாறிருக்கையில், இந்த விவகாரத்தை மாத்திரம் ஏன் இவ்வளவு பெரிய அரசியல் விவாதமாக மாற்ற வேண்டும்? இருதரப்பிலும் முன்னெடுக்கப்படும் விவாதங்கள் காரணமாகவே இந்த முழுப் பிரச்சினைக்கும் தேவையற்ற அரசியல் சாயம் பூசப்பட்டுள்ளது.
எந்தவொரு அரசாங்கமும் தமக்கு நம்பிக்கையற்றவர்களை உயர் பதவிகளில் அமர்த்துவதில்லை. எனவே, இந்த அரசாங்கத்தின் கீழ் ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோர் பதவிகளைப் பெற்றுக்கொண்டமை குறித்து குற்றஞ்சாட்டுவதில் அர்த்தமில்லை.
இதேவேளை, சலே தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். விசாரணைகளின் போதோ அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்படும் போதோ, கைதிகள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாவது இன்று நேற்று நடக்கும் ஒரு விடயமல்ல. அது கடந்த காலங்களிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளது. அத்தகைய அத்துமீறல்கள் அல்லது துன்புறுத்தல்களை எவரும் அங்கீகரிக்க முடியாது. அது குறித்து நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க முடியும், எடுக்கவும் வேண்டும்.