உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நீக்கி, அவர்களை விடுவித்து அந்த பொறுப்பை சிங்கள பௌத்தர்கள் மீது சுமத்தி, கத்தோலிக்க – பௌத்த நல்லுறவை அழிக்கவே பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முயற்சிக்கிறார். கத்தோலிக்க சபையானது அரச சார்பற்ற நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில குற்றஞ்சாட்டினார்.
கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஸ் சலே குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளதை பேராயர் கர்தினால் ஆதரித்துள்ள நிலையில், மகாநாயக்க தேரர்கள் சித்திரவதைக்கு எதிராக கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். இவ்வாறான கருத்துக்கள் எதிர்வரும் காலங்களில் கத்தோலிக்க சபைக்கும், புத்தசாசனத்துக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும்.
கத்தோலிக்க சமூகத்துக்கும், சிங்கள பௌத்தர்களுக்கும் இடையில் கடந்த காலங்களில் சிறந்த நல்லிணக்கம் காணப்பட்டது. ஆனால் தற்போது பௌத்தர்களையும், கத்தோலிக்கர்களையும் வேறுப்படுத்தி, சிங்களவர்களை பலவீனப்படுத்தும் சூழ்ச்சி திட்டமிட்டவகையில் முன்னெடுக்கப்படுகின்றன. அரச சார்பற்ற நிறுவனங்கள் கத்தோலிக்க சபையை ஆக்கிரமித்து இனங்களை பிளவுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
அரச சார்பற்ற நிறுவனங்களை முன்னிலைப்படுத்தியே அருந்தந்தையர்களான சிறில் காமினி, ஜூட் பிரனாந்து, ரொஹான் சில்வா ஆகியோர் கத்தோலிக்க சபையில் செயற்படுகிறார்கள். இவர்கள் தான் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி உள்ளார் என்று குறிப்பிட்டுக் கொண்டு சூழ்ச்சி செய்கிறார்கள்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நீக்கி, அவர்களை விடுவித்து அந்த பொறுப்பை சிங்கள பௌத்தர்கள் மீது சுமத்தி, கத்தோலிக்க – பௌத்த நல்லுறவை அழிக்கவே இவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள்.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கைக்கு அமைவாகவே ரவி செனவிரத்ன பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், சானி அபேசேகர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராகவும் நியமிக்ப்பட்டுள்ளார்கள். இலங்கையில் முதன்முறையாகவே அரசியல் கட்சியின் மேடையில் பிரசாரம் செய்த இருவர் பாதுகாப்புத்துறையுடன் தொடர்புடைய உயர் பதவிக்கு இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்கள்