உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் அரசியல் பின்னணியைக் கொண்ட ஏனைய பல குற்றச் செயல்களில், அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலி முதன்மைப் பாத்திரம் வகித்துள்ளார் எனக் குற்றம் சாட்டி, குற்றப் புலனாய்வுத் திணைக்களமானது (CID) சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (20) அதிரடி வெளிப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலிப் பீரிஸ், பிரான்சில் வைத்து அசாத் மௌலானாவிடம் (Asad Maulana) விசாரணையாளர்கள் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளதாகவும், இது உயிர்த்த ஞாயிறு விசாரணை வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை (Breakthrough) என்றும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர தலைமையிலான குழுவினர் பிரான்சுக்கு விஜயம் செய்து, அங்குள்ள இலங்கைத் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்தே அசாத் மௌலானாவின் இந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், அந்த வாக்குமூலத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விரிவான தகவல்கள் அடங்கியுள்ளன என்றும் கூறினார்.
மௌலானாவின் வாக்குமூலத்தை நீதிமன்றில் சுட்டிக்காட்டிய திலிப் பீரிஸ், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னாலிருந்து செயல்பட்ட “சூத்திரதாரி” (Mastermind) சுரேஷ் சாலியே என்றும், ஒரு குறிப்பிட்ட அரசியல் இலக்கை அடைவதற்காகவே இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
கோட்டாபய வந்ததும் பிள்ளையான் விடுதலை உறுதிமொழி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பிறகு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையானைச் சந்தித்ததாக அரசுத் தரப்பு நீதிமன்றில் தெரிவித்தது. கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஒரு வாரத்திற்குள் பிள்ளையான் விடுதலை செய்யப்படுவார் என அந்தச் சந்திப்பின் போது அவருக்கு உறுதியளிக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதும், அதுவரை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த சுரேஷ் சாலி, புலனாய்வுத் தகவல்கள் ஏனைய அரச நிறுவனங்களுக்குக் கசிவதைத் தடுக்கும் நோக்கில் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) தலைவராக நியமிக்கப்பட்டார் என்றும் திலிப் பீரிஸ் குற்றம் சாட்டினார்.
சஹ்ரானின் சகோதரருக்குப் பிணை வழங்க இராணுவப் புலனாய்வுப் பிரிவு உதவி
கடந்த 2017 மார்ச் 10 ஆம் திகதி அலியார் சந்தியில் இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, தற்கொலைத் குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிமின் சகோதரரான சைனி உள்ளிட்ட தீவிரவாதக் குழு உறுப்பினர்களுக்குப் பிணை எடுப்பதற்காக, இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் பிள்ளையானும் நிதியுதவி வழங்கியுள்ளனர் என்ற விபரமும் சட்டமா அதிபர் திணைக்களத்தால் நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டது.
சுரேஷ் சாலியின் வேண்டுகோளுக்கு இணங்க, இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் பொது மக்களின் வரிப்பணத்திலிருந்து (அரசுப் பணம்) 250,000 ரூபாவையும், பிள்ளையான் தனது பங்கிற்கு 50,000 ரூபாவையும் இதற்காக வழங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. தேர்தலுக்கு முன்னதாக இவ்வாறான தீவிரவாதத் தகவல்கள் வெளியில் கசிவதைத் தடுப்பதற்காகவே, தீவிரவாதப் போக்குடைய நபர்களைப் பாதுகாக்க அரச நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியது.
அரசியல் படுகொலைகளும் கடத்தல்களும்
பிள்ளையானின் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களும், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சில அதிகாரிகளும் இணைந்து கூட்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில் அரசியல் படுகொலைகளையும் கடத்தல்களையும் செய்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் பகிரங்கப்படுத்தினார்.
ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னெலிகொட கடத்தப்பட்டமை, கீத் நொயார் மீதான தாக்குதல், லசந்த விக்ரமதுங்க படுகொலை மற்றும் உபாலி தென்னகோன் மீதான தாக்குதல் உள்ளிட்ட முக்கிய குற்றங்கள் இந்த கூட்டுக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டவை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பிள்ளையான் குழுவைச் சேர்ந்த 2,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவு ஊடாக மாதாந்த சம்பளம் வழங்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்ட நபர்களின் சட்டத்தரணிகளுக்கான கட்டணங்களும் இந்த அரச நிதியிலிருந்தே செலுத்தப்பட்டுள்ளதாக திலிப் பீரிஸ் குறிப்பிட்டார்.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு அசாத் மௌலானாவின் குடும்பத்தினரை சுரேஷ் சாலி அஹுங்கல்ல பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்க வைத்திருந்ததுடன், மௌலானாவுக்கு வெளிநாட்டுத் தூதரகமொன்றில் வேலை வாங்கித் தருவதாகவும் உறுதியளித்திருந்தார். இதற்கு ஆதாரமாக அந்த விடுதிப் பதிவேடுகளை விசாரணையாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
சாலி தரப்பு நிராகரிப்பு
அரசுத் தரப்பின் இந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் சுரேஷ் சாலி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ முற்றாக நிராகரித்தார். அசாத் மௌலானாவின் வாக்குமூலமானது நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்படும் வரை, அதனை ஒரு சாட்சியமாக ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் வாதிட்டார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த கோட்டை நீதவான், சுரேஷ் சாலியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவது மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 127 ஆவது பிரிவின் கீழ் அவர் வாக்குமூலம் அளிப்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் மீதான தீர்ப்புகளை எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதி வழங்குவதாக அறிவித்தார்.
அதுவரை சுரேஷ் சாலி தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார்.