தபால் சோதனையிடும் அதிகாரத்தை விரிவாக்கும் முன்மொழிவு, பொலிஸாருக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தபால் ஊழியர்களுக்கு அல்ல என்றும் கனடா மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வசந்த கால பொருளாதார மேம்பாட்டு அறிக்கையில் (spring economic update) சேர்க்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, சட்ட அமுலாக்கத்துறையினர் தகுந்த பிடியாணை (warrant) மூலம் மட்டுமே தபால்களை சோதனையிடவும் பறிமுதல் செய்யவும் அனுமதிக்கும் என்று கேரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) உறுதிப்படுத்தினார்.
தற்போது 500 கிராமுக்கு குறைவான எடையுள்ள பொதிகளை பிரித்துப் பார்க்க முடியாத சட்ட ஓட்டையைச் சரிசெய்வதே இந்த முன்மொழிவின் நோக்கமாகும். பென்டானில் (fentanyl) போன்ற போதைப்பொருட்களை சிறிய அளவில் கடத்துபவர்கள் இந்தச் சட்ட இடைவெளியைப் பயன்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள நுனாவுட் (Nunavut) போன்ற தொலைதூரப் பகுதிகளில், சட்டவிரோதப் பொருட்கள் நுழையும் முக்கிய வழியாக தபால் சேவை இருப்பதைச் சுட்டிக்காட்டிய ஆனந்தசங்கரி, இது கவலைக்குரிய விடயம் எனக் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டம் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட மசோதா C-2 இன் (Bill C-2) அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் அதன் வரம்பு தற்போது சுருக்கப்பட்டுள்ளது. முந்தைய பதிப்புகளில் கனடா போஸ்ட் (Canada Post) ஊழியர்கள் உட்பட அரசாங்க அதிகாரிகளுக்கும் விரிவான அனுமதி வழங்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இவ்வளவு முக்கியமான அதிகாரம் குறித்த விடயம் ஏன் நிதி அறிக்கையில் சேர்க்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சிகள், இது குறித்து வெளிப்படையான விவாதம் நடத்தப்பட வேண்டும் என வாதிடுகின்றன.
பொது பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்குமான பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை என்று அரசாங்கம் நிலைப்பாடு எடுத்துள்ளது.