இயற்கையே உலகின் தலைசிறந்த பேராசான். பல்லினத்துவமே அது போதிக்கும் மிகப்பெரும் பாடம். இயற்கையின் பல்வகை உயிரினங்களைப் பற்றிப் பாடங்களில் பயிலுகின்ற நாம் அது போதிக்கும் பன்மைத்துவத்தின் எளிய முக்கியத்துவத்தை உள்வாங்குவதில்லை.இதனாலேயே பூமியை எமக்கு ஏற்ற கிரகமாகத் துப்பரவு செய்யும் நோக்கில் ஏனைய உயிரினங்களைக் கொன்றொழித்து வருகின்றோம். இதன் இன்னுமொரு வெளிப்பாடாகவே உலகில் நிலவுகின்ற இனங்களின், மொழிகளின், பண்பாடுகளின், மதங்களின் பன்மைத்துவங்களை அழிக்கும் போக்கும் மேலோங்கி வருகின்றது. பேராசான் இயற்கையிடம் கற்க மறுப்பதன் விளைவே இன்று உலகில் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஆக்கிரமிப்புப் போர்கள் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் 2025ஆம் ஆண்டுக்கான பசுமை அமைதி விருதுகள் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (26.04.2026) யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு தலமை வகித்து உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இயற்கையின் பார்வையில் மண்ணுள் உறையும் புழுக்கள் தொடங்கி வானத்தில் உலாவும் பறவைகள் வரை, சின்னஞ்சிறிய அறுகம் புல் தொடங்கிப் பெரு விருட்சமான ஆலமரம் வரை சகல உயிரினங்களும் சமமானவையே. இயற்கை இவற்றிடையே எந்த ஏற்றத்தாழ்வையும் பார்ப்பதில்லை. ஒவ்வொரு உயிரியையும் – அது உருவத்தில் சிறியதோ பெரியதோ – எதோவொரு முக்கியத்துவம் கருதியே இயற்கை படைத்திருக்கிறது. இயற்கையின் சமநிலைக்கு இந்தப் பல்லினத்துவம் அவசியமானதாகும். இதில் ஏதோவொன்று அழியுமாயினும் இயற்கைச் சமநிலை பெரிதும் பாதிக்கப்படும். ஆனால் பரிணாமத்தின் உச்சியில் கோலோச்சுகின்ற நாம் மனித இனமே பெரிது என்று இறுமாந்து ஏனைய உயிரினங்களின் மீது அறிவிக்கப்படாத போர் ஒன்றை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றோம்.
உலகில் இயற்கையின் மாறுபட்ட சூழமைவின் காரணமாகவே மனித இனத்திலும் அது பேசுகின்ற மொழிகளிலும், கடைப்பிடிக்கின்ற மதங்களிலும், பண்பாட்டிலும் வேறுபாடுகள் நிலவுகின்றன. ஆனால், இயற்கையிடம் இருந்து பல்லினத்துவத்தின் இன்றியமையாமையைக் கற்க முடியாதவர்கள் இதன் பிரதிபலிப்பாக மனித இனத்தின் பன்மைத்துவத்தையும் நிராகரித்து வருகிறார்கள். மொழியால், பண்பாட்டால், மதத்தால் பெரும்பான்மையாக உள்ள இனம் சிறுபான்மை இனங்களின் மொழியையும், பண்பாட்டையும் இல்லாது ஒழிக்கத் துடிக்கின்றது. தனது பெரும்பான்மைப் பலத்துக்குள் அவற்றைக் கரைக்க முயற்சிக்கின்றது. உலகில் நிகழ்ந்துகொண்டிருக்கும் உள்நாட்டுப் போர்கள் பலவற்றுக்கும் பன்மைத்துவத்தை நிராகரிக்கும் இந்தப் பெரும்பான்மை ஆதிக்கப்போக்கே பிரதான காரணமாகும்.
இயற்கையின் வளங்கள் யாவும் அனைத்து உயிரிகளுக்கும் உரித்தானவை. ஆனால், மனிதன் அனைத்து வளங்களும் தனக்கானவை என்பது போலப் பேராசைப் பெருநெருப்பில் இயற்கை வளங்களை அழித்துக்கொண்டிருக்கிறான். அதுவும், வல்லாண்மை நாடுகள் தங்களது நாட்டின் எல்லைகளையும் தாண்டிப் பிறநாடுகளினுள் அத்துமீறி நுழைந்து வளங்களைக் கொள்ளையடித்து வருகின்றன. இதற்காகவே, வேறு காரணங்களைச் சாட்டாகக்கூறி அந்நாடுகளின் மீது பெரும் போர்களையும் தொடுத்து வருகின்றன. இந்தப் பின்னணியிலேயே, எமது மாணவர்களிடம் இயற்கைச் சூழலின் பல்லினத்துவத்தின் முக்கியத்துவத்தையும் இதனூடாக மனித இனத்தின் பன்மைத்துவத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துச்சொல்வது அவசியமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.