திறைசேரி கணக்கிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்கடொலர் காணாமல் போனது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், இது குறித்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிதி அமைச்சின் அதிகாரி ஒருவர் நேற்று குளியாப்பிட்டியவில் உள்ள அவரது வீட்டுத் தோட்டத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் பிரிவின் உதவிப் பணிப்பாளரான 50 வயதுடைய ரங்க நிஷாந்த என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் தனது தோட்டத்தில் வைத்து காலில் உள்ள தமனியை (artery) வெட்டி தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். தோட்டத்திற்குச் சென்ற அவரது பிள்ளைகளே அவர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டுள்ளனர். எனினும், இது கொலையா, தற்கொலையா அல்லது காலில் நரம்பு வெட்டப்பட்டதால் ஏற்பட்ட தற்செயலான விபத்தா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு வழங்கப்பட வேண்டிய 2.5 மில்லியன்டொலர் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவு சைபர் கொள்ளை மூலம் திசைதிருப்பப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஒழுக்காற்று விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் நான்கு சிரேஷ்ட நிதி அமைச்சு அதிகாரிகளை அரசாங்கம் பணி இடைநீக்கம் செய்துள்ளது. இதில் வெளிநாட்டு வளங்கள் பிரிவின் பணிப்பாளர் மற்றும் உதவிப் பணிப்பாளர் ஒருவரும், பொதுக் கடன் மேலாண்மை அலுவலகத்தின் (PDMO) பணிப்பாளர் மற்றும் கூடுதல் பணிப்பாளர் நாயகம் ஒருவரும் அடங்குவர்.
ரங்க நிஷாந்த தனது வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்தில் வேலை செய்வதற்காகச் சென்றதாகவும், அவர் நீண்ட நேரமாகத் திரும்பாததால் குடும்பத்தினர் தேடியபோது வாழை மரத்திற்கு அருகில் விழுந்து கிடந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவரது கைகள் மற்றும் கால்களில், குறிப்பாக தமனிகளுக்கு அருகில் வெட்டுக் காயங்கள் காணப்பட்டன. உடலுக்கு அருகில் ஒரு கத்தியும் மீட்கப்பட்டது.
அவர் பொலிஸாரைத் தவிர்த்து வந்ததாக வெளியான சில செய்திகளுக்கு மாறாக, அவர் ஏப்ரல் மாதத்தில் பலமுறை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல் தொடர்புகள் மற்றும் தரவுகள் அழிக்கப்பட்டமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அழிக்கப்பட்ட தரவுகளை மீட்டெடுக்க CID தற்போது முயற்சித்து வருவதோடு, மேலதிக தடயவியல் ஆய்வுகளுக்காக அவரது வீட்டிலிருந்த நான்கு மொபைல் போன்களையும் கைப்பற்றியுள்ளது.
குளியாப்பிட்டிய நீதவான் சம்பவ இடத்திற்கு வந்து மரண விசாரணை நடத்தினார். திறைசேரி பணம் காணாமல் போனது குறித்த விசாரணையில் இவர் ஒரு முக்கிய நபராகக் கருதப்பட்டார். இந்த அதிகாரி மின்னஞ்சல் தொடர்புகளுக்கான முதன்மை நபராக இருந்ததால், இவரது மரணம் தற்போதைய விசாரணைகளுக்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் திறைசேரி கொள்ளை தொடர்பான உயர்மட்ட மறைப்பு நடவடிக்கைகளுடன் (high-level cover-up) இந்த மரணத்திற்குத் தொடர்பு இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இது குறித்து சிவில் ஆர்வலர் ராஜித கீர்த்தி தென்னக்கோன் கூறுகையில், குளியாப்பிட்டிய மத்திய கல்லூரி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரான ரங்க நிஷாந்த, உண்மையில் இந்தத் திறைசேரி கொள்ளை தொடர்பாக முதன்முதலில் உத்தியோகபூர்வமாக பொலிஸில் புகார் அளித்தவர் என்று குறிப்பிட்டார்.
குளியாப்பிட்டிய பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.