கனடா எல்லை சேவைகள் முகமையின் (CBSA) பல வருட கால புலனாய்வைத் தொடர்ந்து, ரெஜினா (Regina) நகரைச் சேர்ந்த ஒருவர் குடியேற்ற மோசடி வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.
அப்துல்காதிர் அலி என்பவர், குடியேற்ற மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளை ஏற்று பிப்ரவரி 17, 2026 அன்று குற்றவாளி என ஒப்புக்கொண்டார். அவருக்கு இரண்டு ஆண்டுகள் நன்னடத்தை காலம், 200 மணிநேர சமூக சேவை மற்றும் 75,000 டாலர் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டில், ரெஜினாவை தளமாகக் கொண்ட குழுவொன்று கனடா குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பிடம் (IRCC) அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த விசாரணை ஆரம்பமானது. உள்ளூர் ஸ்பான்சர்ஷிப் அமைப்பொன்றில் தனக்கிருந்த பதவியைப் பயன்படுத்தி, அகதிகளின் குடியேற்ற விண்ணப்பங்களை விரைவுபடுத்தித் தருவதாகக் கூறி அவர்களிடமிருந்து அலி பணம் பெற்றதாக அந்தப் புகாரில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து, CBSA அதிகாரிகள் அவரது இல்லத்தில் சோதனை நடத்தி மின்னணு சாதனங்களை ஆதாரங்களாகக் கைப்பற்றினர். அலி குறைந்தது 31 போலியான குடியேற்ற விண்ணப்பங்களைச் சமர்ப்பித்ததை விசாரணையில் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
முறையான அறிவுறுத்தல் அல்லது சம்மதமின்றி ஸ்பான்சர்ஷிப் படிவங்களில் கையொப்பமிட்டது உட்பட, போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்ததையும், விண்ணப்பதாரர்களைப் பொய்யான தகவல்களை வழங்குமாறு தூண்டியதையும் அலி ஒப்புக்கொண்டார்.
கனடாவின் குடியேற்ற முறையின் நேர்மையைப் பாதுகாப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை இந்த வழக்கு எடுத்துக் காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.