நாம் அன்றாடம் பயன்படுத்தும் தேநீர் பைகள் (Tea bags), ஒவ்வொரு முறையும் கோடிக்கணக்கான நுண்நெகிழித் துகள்களை வெளியேற்றுவதாகவும், இது மனித ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையலாம் என்றும் புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
மைக்ரோபிளாஸ்டிக் மற்றும் நானோபிளாஸ்டிக் எனப்படும் இந்த மிகச்சிறிய துகள்கள், தேநீரை அருந்தும்போது மனித உடலின் திசுக்களில் தங்கிவிடுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இந்த நுண்நெகிழித் துகள்களின் நீண்டகால பாதிப்புகள் குறித்து இன்னும் விரிவான ஆய்வுகள் தேவைப்பட்டாலும், ஆரம்பகட்ட ஆதாரங்கள் இவை புற்றுநோய் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கின்றன.
ஈரான் மற்றும் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட 19 ஆய்வுகளின் பகுப்பாய்வு முடிவுகளின்படி, ஒரு சாதாரண காய்ந்த தேநீர் பையில் சுமார் 130 கோடி பிளாஸ்டிக் துகள்கள் இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, தேநீர் தயாரிப்பதற்காக இந்தப் பைகளைச் சுடுநீரில் இடும்போது, வெப்பத்தினால் அந்தப் பிளாஸ்டிக் துகள்கள் மேலும் சிதைந்து அவற்றின் எண்ணிக்கை சுமார் 1,470 கோடி வரை அதிகரிக்கிறது.
நைலான் மற்றும் பி.இ.டி (PET) கொண்டு தயாரிக்கப்பட்ட தேநீர் பைகளை அதிக வெப்பம் கொண்ட நீரில் ஊறவைக்கும்போது, மிக அதிகமான அளவில் பிளாஸ்டிக் துகள்கள் வெளியேறுவது சோதனையில் உறுதியாகியுள்ளது.
இந்தத் துகள்கள் தேநீர் பையின் மூலப்பொருட்களிலிருந்தோ, உற்பத்தியின் போது ஏற்படும் மாசுபாடுகளிலிருந்தோ அல்லது வேதிவினைகளாலோ உருவாகலாம் என கருதப்பட்டாலும், இதன் துல்லியமான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
தேநீர் பைகள் மட்டுமன்றி, போத்தல்களில் அடைக்கப்பட்ட தேநீர் (Bottled tea) மற்றும் பபுள் டீ (Bubble tea) போன்ற பானங்களிலும் பிளாஸ்டிக் பாட்டில்கள், மூடிகள் மற்றும் உறிஞ்சுகுழாய்கள் மூலமாக நுண்நெகிழித் துகள்கள் கலக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பிரபல நடிகை பெவர்லி காலர்டு (Beverley Callard – 69) தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
தனக்குப் புற்றுநோய் இருப்பது தெரியாமலேயே ‘I’m A Celebrity’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகவும், அங்கு மயங்கி விழுந்த பின்னரே தனது உடல்நிலை குறித்துத் தெரியவந்ததாகவும் அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலில், அன்றாட உணவுக் பழக்கவழக்கங்களில் நாம் செய்யும் சிறு தவறுகள் கூட பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
தேநீர் பைகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க நிபுணர்கள் சில எளிய வழிமுறைகளைப் பரிந்துரைக்கின்றனர்:
இலைத் தேநீர்: தேநீர் பைகளுக்குப் பதிலாகத் தேயிலைகளை நேரடியாகப் (Loose-leaf tea) பயன்படுத்துவது சிறந்தது.
காகிதப் பைகள்: நைலான் அல்லது பிளாஸ்டிக் வலை போன்ற பைகளைத் தவிர்த்து, காகிதத்தால் ஆன தேநீர் பைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
அலசுதல்: தேநீர் பைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒருமுறை அலசுவது துகள்களின் எண்ணிக்கையைக் குறைக்க உதவும்.
மைக்ரோவேவ் தவிர்த்தல்: மைக்ரோவேவ் அடுப்பில் தேநீர் தயாரிப்பதைத் தவிர்ப்பதும், வடிகட்டப்பட்ட குடிநீரைப் பயன்படுத்துவதும் மாசுபாட்டைக் குறைக்க உதவும்.
தற்போது உணவு மற்றும் குடிநீரில் நுண்நெகிழித் துகள்கள் பரவியுள்ள சூழலில், இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும் என ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.