வலான ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி இந்திக வீரசிங்க எனத் தன்னை அடையாளப்படுத்தி, WhatsApp ஊடாகப் பல பிரதேச வர்த்தகர்களை அச்சுறுத்திப் பணம் பறித்த நபர் ஒருவர், இன்று (25) பண்டாரகம அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் போதைப்பொருள் கடத்தல், திருட்டு மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காகச் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான “துசித பிரம்மரத்ன” எனும் நபர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அம்பலாங்கொடை, இரத்தினபுரி, ஹோரணை, பாணந்துறை உள்ளிட்ட பகுதிகளில் வர்த்தகர்களை ஏமாற்றி இவர் பல இலட்சம் ரூபாய்களை ஈட்டியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் தனது WhatsApp கணக்கில் நிலையப் பொறுப்பதிகாரி இந்திக வீரசிங்கவின் சீருடை அணிந்த புகைப்படத்தைப் பதிவேற்றி, வர்த்தகர்களின் சட்டவிரோதச் செயல்கள் பற்றிய தகவல்கள் தன்னிடம் இருப்பதாகவும், சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்கத் தான் அனுப்பும் நபரிடம் பணம் தருமாறும் மிரட்டியுள்ளார்.
மேலும், பிரபல பிக்குகள் மற்றும் பிக்குணிகளிடம் தனது சகோதரி லண்டனில் வசிப்பதாகவும், அவருக்குத் தானம் வழங்க விரும்புவதாகவும் கூறி, அவர்களின் வங்கி விபரங்கள் மற்றும் செயலிகளின் தகவல்களைப் பெற்றுள்ளார்.
பின்னர், அந்த வங்கி கணக்குகளின் இரகசிய இலக்கங்களை தந்திரமாகப் பெற்று, அதிலிருந்த பணத்தைக் ‘கிரிப்டோ கரன்சி’ ஊடாகத் தனது கணக்கிற்கு மாற்றியுள்ளமையும் அம்பலமாகியுள்ளது.
வலான ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஓலுகல மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்திக வீரசிங்க ஆகியோரின் வழிகாட்டலில் விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இன்று வர்த்தகர் ஒருவரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொள்ள முயன்றபோதே இவர் சிக்கினார். இதன்போது, அவரிடமிருந்து 25 கிராம் 620 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.