சிலாபம் – குருநாகல் பிரதான வீதியில் ஆபத்தான முறையில் மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றபோது, எதிரே வந்த கார் ஒன்றுடன் மோதி மாடு விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 22ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் தித்தகடை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த மாட்டு வண்டியை வீதியில் ஓட்டுவதற்கு எந்தவித அனுமதியும் பெறப்படவில்லை என்பதும், அதனை ஓட்டிய நபர் மாட்டை மிகவும் கொடூரமான முறையில் தாக்கி ஓட்டிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கமைய, விபத்துக்குள்ளான வண்டியை ஓட்டிய நபரைச் சிலாபம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவினர் நேற்று (24) கைது செய்தனர். சந்தேக நபர் மாட்டை ஓட்டப் பந்தயங்களுக்காகப் பழக்குவதற்காகவே இவ்வாறு வீதியில் ஓட்டியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
விலங்கு சித்திரவதை சட்ட விதிகளின்படி அவர் இன்று (25) சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, அடுத்த வழக்குத் தவணைக்கான திகதி குறிக்கப்பட்டதுடன், சந்தேக நபர் 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
விபத்தில் சிக்கிய மாடு தற்போது ஆரோக்கியமான நிலையில் உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்வதற்காகச் சிலாபம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.