ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது-பாகர் காலிபாஃப் (Mohammad-Bagher Ghalibaf), அமெரிக்கப் பொதுமக்களுக்கு விடுத்துள்ள உருக்கமான மற்றும் ஆக்ரோஷமான செய்தியில், நவீன கால சமூக ஊடகப் போர் முறையைப் பயன்படுத்தித் தனது நாட்டின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
தனது உரையை “கவனிங்கள்” (Listen up) என்று தொடங்கிய காலிபாஃப், 1980-களில் ஈராக் – ஈரான் போரின் போது தனது சகோதரரை யுத்த களத்தில் இழந்ததைத் தனிப்பட்ட உதாரணமாகக் குறிப்பிட்டார். “நாங்கள் எமது நேசத்திற்குரிய மண்ணுக்காக எமது அனைத்தையும் – எங்களிடம் உள்ள ஒவ்வொன்றையும் – தியாகம் செய்யத் தயார்,” என்று அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.
நாங்கள் போர் விரும்பி அல்ல: “நாங்கள் போரை விரும்புபவர்கள் அல்ல. ஆனால் எமது தாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய நேரம் வரும்போது, எங்களில் ஒவ்வொருவரும் ஒரு போர்வீரனாக மாறிவிடுவோம்,” என அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவ்வப்போது விடுக்கும் தரைவழித் தாக்குதல் மிரட்டல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் தேசிய அணிதிரட்டல் பிரச்சாரத்திற்கு (National mobilization campaign) இதுவரை 7 மில்லியன் ஈரானியர்கள் பதிலளித்துள்ளதாக அவர் உரிமை கோரினார். அவர்கள் அனைவரும் ஆயுதம் ஏந்தி நாட்டைப் பாதுகாக்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ட்ரம்ப் மற்றும் அவரது அமைச்சரவை பயன்படுத்தும் அதே போன்ற ஆக்ரோஷமான சொற்களைப் பயன்படுத்தி அவர் தனது உரையை நிறைவு செய்தார். “நீங்கள் எமது இல்லத்தைத் தேடி வந்தால்… முழு குடும்பத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும். நாங்கள் தயாராகவும், ஆயுதம் ஏந்திய நிலையிலும், நிமிர்ந்தும் நிற்கிறோம் (Locked, loaded and standing tall). முடிந்தால் வந்து பாருங்கள் (Bring it on),” என அவர் சவால் விடுத்துள்ளார்.