கொழும்பு, ஜூன் 17: உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்வதை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று பிற்பகல் வரை ஒத்திவைத்துள்ளது.
இந்த மனு மீதான பரிசீலனை, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹான அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது என அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது, தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த வழக்கைக் கேட்பதில் இருந்து தாம் விலகுவதாக நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ அறிவித்தார்.
மனுதாரரான கோட்டாபய ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, தனது கட்சிக்காரரைக் கைது செய்வதைத் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவை (Interim Injunction) பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரினார்.
எனினும், பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், இந்த மனு தொடர்பான ஆவணங்கள் இன்று காலையிலேயே தமக்குக் கிடைத்தன என்றும், பிரதிவாதிகளிடமிருந்து இதுவரையில் எந்தவொரு அறிவுறுத்தல்களும் தமக்குக் கிடைக்கவில்லை என்றும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
அத்துடன், பிரதிவாதிகளிடமிருந்து தமக்கு இன்னும் அறிவுறுத்தல்கள் கிடைக்காத நிலையில், மனுதாரர் கைது செய்யப்பட மாட்டார் என்ற எந்தவொரு உத்தரவாதத்தையும் (Undertaking) தம்மால் தற்போதைக்கு நீதிமன்றத்திற்கு வழங்க முடியாது என்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்தே, இந்த மனு மீதான மேலதிக பரிசீலனையை இன்று பிற்பகல் வரை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.