மாகாணத்தில் இருக்கக்கூடிய அத்தனை கட்டமைப்புகளையும் தோற்கடிப்பதற்கு வேலை செய்கிறார்கள் — கஜேந்திரகுமார் பொன்னம்பலம்என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவித்தார்.
தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தற்போது அந்த வைத்தியசாலை மாகாண சபை கட்டமைப்புக்குள் இயங்கி வருகிறது. புற்றுநோய் வைத்தியசாலைக்குத் தேவையான மருத்துவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலிருந்தும், தாதியர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையிலிருந்தும் வழங்கப்படுகின்றனர். இதனால் இரண்டு வைத்தியசாலைகளுக்கும் ஆளணி பற்றாக்குறை நிலவுகிறது.
இந்நிலையில் வைத்தியர் சிறீபவானந்தராஜா, ஆதார வைத்தியசாலையையும் புற்றுநோய் வைத்தியசாலையையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று யோசனை முன்வைத்தார். தேசிய மக்கள் சக்தி தவிர்த்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் புற்றுநோய் பிரிவை விசேட பிரிவாக அங்கீகரிக்க ஒப்புக்கொண்டனர்; ஆனால் ஆதார வைத்தியசாலையை மாகாண சபையிலேயே வைக்கவும் இணக்கம் தெரிவித்தனர்.
இருப்பினும் தெல்லிப்பழை பிரதேச கூட்டத்தில் சிறீபவானந்தராஜா அனைத்தையும் மத்திய அரசுக்கு மாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தார். இதனை பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுனா இராமநாதன் கடுமையாக எதிர்த்தார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் கூறியதாவது: அரசாங்கம் திட்டமிட்டே மாகாண சபைக்கு நிதி வழங்காமல் அதன் கட்டமைப்புகளை செயலிழக்கச் செய்கிறது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு போதுமான ஆளணியும் நிதியும் இல்லாமல் நடத்தப்படுகிறது. அங்கு இன்றும் நோயாளிகள் தரையில் படுத்திருக்கின்றனர். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதாக வாக்குறுதி அளித்தார்; ஆனால் தற்போதைய அரசு அந்த வளங்களை அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு திருப்பிவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெறும் பெரும்பாலான அபிவிருத்திகள் புலம்பெயர் தமிழர்களின் நன்கொடைகளால்தான் நடக்கின்றன; அரசு போதுமான நிதி வழங்கவில்லை.
ஆதார வைத்தியசாலையை மத்திய அரசுக்கு மாற்றுவது நோயாளிகளுக்கான தீர்வல்ல; மாறாக மாகாணத்தின் கட்டமைப்புகளை முடக்கி மக்களை ஏமாற்றுவதற்கான அணுகுமுறையே என்று அவர் தெரிவித்தார்.
உடனடியாக செய்ய வேண்டியது என்னவென்றால், புற்றுநோய் பிரிவை விசேட அலகாக அங்கீகரித்து தேவையான வளங்கள் அனைத்தையும் வழங்க வேண்டும்; மாகாண சபைக்கு கீழுள்ள பாடசாலைகளுக்கும் வைத்தியசாலைகளுக்கும் போதுமான நிதி வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.