கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால பழமையான கொலை வழக்கு ஒன்றில் ரொறன்ரோ (Toronto) பொலிஸார் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பல சந்தேக நபர்கள் தலைமறைவாக உள்ளதாக நம்புகின்றனர்.
செப்டம்பர் 17, 2006 அன்று இடம்பெற்ற பட்ரிசியோ சாண்டோஸ் (Patrick Santos) என்பவரின் கொலை தொடர்பாக, மரபணு வம்சாவளித் தொழில்நுட்பத்தைப் (Genetic genealogy) பயன்படுத்தி துப்புகளைக் கண்டறிந்ததாக பொலிஸ் துப்பறியும் அதிகாரி ஸ்டீபன் ஸ்மித் (Stephen Smith) வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
21 வயதான சாண்டோஸ், ஸ்கார்பரோவிலுள்ள (Scarborough) பிரிட்லிங்டன் வீதியில் அமைந்திருந்த அவரது தந்தையின் வீட்டின் பின்புறத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது மணிக்கட்டுகள் மற்றும் கணுக்கால்கள் கட்டப்பட்டு, தாக்கப்பட்டுக் மூச்சுத்திணறடிக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டிருந்தார்.
கொலை நடப்பதற்கு முதல் நாள் இரவு சாண்டோஸ் தனது நண்பர்களுடன் டவுன்டவுனில் உள்ள ஒரு இரவு விடுதியில் இருந்துள்ளார். இறப்பதற்கு முன் அவர் இறுதியாக அதிகாலை 4:30 மணிக்குத் தனது காதலியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட டி.என்.ஏ (DNA) மாதிரிகள், தேசிய டி.என்.ஏ தரவுத்தளத்திலுள்ள (National DNA databank) பதிவுகளுடன் ஒத்துப்போகவில்லை என்று ஸ்மித் செய்தியாளர்களிடம் கூறினார். 2020 ஆம் ஆண்டில், புலனாய்வாளர்கள் சந்தேக நபர் ஒருவரின் டி.என்.ஏ விபரங்களை மேலதிக ஆய்வுக்கு உட்படுத்தினர். அது உடனடியாக ஒரு சந்தேக நபரை அடையாளம் காட்டாவிட்டாலும், அந்த ஆய்வின் மூலம் கிடைத்த தகவல்கள் கடந்த ஆண்டு சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரைக் கண்டறிய அதிகாரிகளுக்கு உதவியது.
“அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட டி.என்.ஏ பகுப்பாய்வு, 2006 இல் கொலை நடந்த இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட ஆதாரங்களுடன் ஒத்துப்போவதை உறுதிப்படுத்தியது” என்று அவர் கூறினார்.
ஹாமில்டனைச் (Hamilton) சேர்ந்த 43 வயதான பியர் ஓ’கானர் (Pierre O’Connor) என்பவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டு, அவர் மீது முதல் நிலைக்கொலை (First-degree murder) குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.