முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்காக அரசியலமைப்பின் 18 ஆம் திருத்தம் கொண்டு வரப்பட்டமை தவறு. கடந்த கால தவறுகள் ஊடாக பாடம் கற்றுக்கொண்டுள்ளோம். அந்த தவறுகளை இனி செய்ய போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (30) வழக்கு நடவடிக்கைகளுக்காக முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
நீதித்துறையின் மீது எமக்கு முழுமையாக நம்பிக்கை உள்ளது. ஆட்சி மாறினாலும் நீதிமன்றங்கள் சுயாதீனமாகவே செயற்படுகின்றன. ஆனால் பொலிஸார் மீது எமக்கு நம்பிக்கையில்லை. அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி நிரலை பொலிஸார் சிறந்த முறையில் செயற்படுத்துகிறார்கள்.
பிரதம நீதியரசருக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் பதவி காலம் வழங்க வேண்டும் என்பதற்காகவே அரசியலமைப்புத் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. தனிநபர்களை இலக்காகக் கொண்டு அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளும் போது அதன் விளைவு எதிர்மறையானதாகவே அமையும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக வேண்டும் என்பதற்காக அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது.இது முற்றிலும் தவறானது. அதனைத் தொடர்ந்து அரசியலமைப்பின் 19 மற்றும் 20 ஆம் திருத்தம் தனிநபரை இலக்காகக் கொண்டே உருவாக்கப்பட்டது.
கடந்த கால தவறுகள் ஊடாக பாடம் கற்றுக்கொண்டுள்ளோம். அந்த தவறுகளை இனி செய்ய போவதில்லை.இந்த அரசாங்கமும் அவ்வாறான தவறை செய்யக் கூடாது. தனிநபரை இலக்காகக் கொண்டு நீதிபதிகளின் பதவிக் காலத்தை அதிகரிப்பதற்கு அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வருவது தவறானதொரு எடுத்துக்காட்டு என்றார்.