ஹேமில்டனில் (Hamilton) சந்தேகத்திற்கிடமான $300,000க்கும் அதிகமான மதிப்புள்ள திருடப்பட்ட சொத்துக்களை பொலிஸார் மீட்டதுடன், 2021 ஆம் ஆண்டு தயாரிப்பான ‘Ram TRX’ வாகனமொன்றைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து 32 பேர் 235 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளனர்.
‘ஹோம் டிப்போ’ (Home Depot) நிறுவனத்தைக் இலக்கு வைத்து நடத்தப்பட்ட “ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறைத் திருட்டு” (organized retail theft) குறித்த விசாரணையைத் தொடர்ந்து 30க்கும் மேற்பட்டோர் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளதாக ஹேமில்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோம் டிப்போ கடைகளில் திருட்டுகள் 25 சதவீதம் அதிகரித்துள்ளதை பொலிஸார் கண்டறிந்ததைத் தொடர்ந்து, ‘புராஜெக்ட் செக்அவுட்’ (Project Checkout) எனப் பெயரிடப்பட்ட நான்கு மாத கால விசாரணை தொடங்கப்பட்டது.
“வெறும் கடைத் திருட்டு விசாரணைகளாகத் தொடங்கியது, விரைவில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயலை வெளிப்படுத்தியது” என்று செவ்வாயக்கிழமை பொலிஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் ஹேமில்டன் ஹோம் டிப்போ கடைகளிலிருந்து அதிக மதிப்புள்ள கருவிகள் மற்றும் கட்டுமான உபகரணங்களைத் திருடி, பின்னர் அந்தப் பொருட்களை சில்லறை விலையை விட மிகவும் குறைந்த விலையில் இணையவழிச் சந்தைகள் (online marketplaces) மூலம் மறுவிற்பனை செய்து வந்ததை விசாரணையாளர்கள் கண்டறிந்தனர்.”
பல சம்பவங்களில், கடை ஊழியர்கள் த தடுக்க முயன்றபோது, சந்தேக நபர்கள் “வன்முறையில் ஈடுபடப்போவதாக மிரட்டியுள்ளனர்” என்று பொலிஸார் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், வர்த்தகக் கட்டிடம் ஒன்றிலும் ஒரு வசிப்பிடத்திலும் இரண்டு தேடுதல் பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டு, திருட்டு கும்பலுடன் தொடர்புடையதாக நம்பப்படும் நூற்றுக்கணக்கான திருடப்பட்ட கருவிகள் மற்றும் பிற பொருட்கள் மீட்கப்பட்டன.
இதன் போது சுமார் $100,000 மதிப்புள்ள 2021 RAM TRX ரக வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விசாரணையின் மூலம் 32 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கூட்டுத் தொகையாக 235 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் $300,000க்கும் அதிகமான மதிப்புள்ள சந்தேகத்திற்கிடமான திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
“ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறைத் திருட்டானது கடைகளுக்கு அப்பால் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது,” எனக் குறிப்பிட்ட பொலிஸார், இத்தகைய குற்றச் செயல்கள் வணிகங்களுக்கும் நுகர்வோருக்கும் செலவுகளை அதிகரிக்கச் செய்கின்றன எனச் சுட்டிக்காட்டினர்.
“இந்தக் கடத்தல் வலையமைப்பை முறியடித்ததன் மூலம், விசாரணையாளர்கள் திருடப்பட்ட சொத்துக்களை மீட்டுள்ளனர், கூடுதல் குற்றங்களைத் தடுத்துள்ளனர் மற்றும் சட்டவிரோதச் சந்தையிலிருந்து திருடப்பட்ட சரக்குகளின் கணிசமான விநியோகத்தை அகற்றியுள்ளனர்,” என்று ஹேமில்டன் பொலிஸார் தெரிவித்தனர்.