ஸ்கார்பரோவில் ஏற்பட்டதாகக் கூறப்படும் பயங்கர விபத்தின் (Street Racing) திடுக்கிடும் தருணங்கள் டேஷ்கேம் (Dashcam) கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த விபத்து தொடர்பாக ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த விபத்தில் இருவர் ஆபத்தான நிலையில் படுகாயமடைந்துள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, ஜூலை 17 ஆம் திகதி காலை 9:30 மணியளவில் மெடோவேல் வீதிக்கு (Meadowvale Road) அருகில் உள்ள ஹைவே 2A (Highway 2A) கிழக்கு நோக்கிய பாதையில், பச்சை நிற ‘லம்போர்கினி’ (Lamborghini) ரக சொகுசு காரும், வெள்ளை நிற ‘மெர்சிடீஸ் ஈ-கிளாஸ்’ (Mercedes E-Class) காரும் அதிவேகத்தில் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளன.
ஒரு கட்டத்தில், மெர்சிடீஸ் கார் கட்டுப்பாட்டை இழந்து, அங்கே சென்று கொண்டிருந்த வெள்ளை நிற ‘போர்டு F-150’ (Ford F-150) ரக பிக்கப் டிரக் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்பின்னர், மெர்சிடீஸ் கார் பாதையை விட்டு விலகி மரத்தின் மீதும் மோதியுள்ளது.
சம்பவ இடத்திலிருந்து லம்போர்கினி காரை ஓட்டி வந்தவர் தப்பிச் சென்றுவிட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
பிக்கப் டிரக்கில் பயணித்த 44 வயதுடைய நபர் மற்றும் 11 மாத ஆண் குழந்தை ஆகிய இருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதேவேளை, மெர்சிடீஸ் காரை ஓட்டிச் சென்ற 15 வயது சிறுவன் மற்றும் அதில் பயணித்த 24 வயது நபர் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதனையடுத்து, விபத்தில் தொடர்புடைய லம்போர்கினி காரின் ஓட்டுநரை பொலிஸார் அடையாளம் கண்டு கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் ரொறன்ரோவைச் சேர்ந்த 42 வயதான அகில் கோர்டன் ஹேவுட் (Akil Gordon Heywood) என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கி உடற்காயம் ஏற்படுத்தியமை (இரண்டு குற்றச்சாட்டுகள்), விபத்து நடந்த இடத்தில் நிறுத்தாமல் தப்பிச் சென்றமை மற்றும் ஆபத்தான முறையில் கார் சாகசப் போட்டியில் ஈடுபட்டமை (Stunt driving) ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரின் தற்போதைய நிலை குறித்து பொலிஸார் கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை. மேலும், இது தொடர்பாக மேலதிக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுமா என்பதும் தெரிவிக்கப்படவில்லை.