கடந்த மாதம் ஒன்ராறியோவின் வோன் (Vaughan) பகுதியில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக, இரண்டு ஆண்கள் மீது முதல்தரக் கொலைக் குற்றம் (First-degree murder) சுமத்தப்பட்டுள்ளதுடன், மூன்றாவது நபர் ஒருவரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கடந்த மே 13 அன்று மாலை 5:30 மணியளவில், கைசர் (Kaiser) மற்றும் ஃபாரஸ்ட் டிரைவ்ஸ் (Forest drives) பகுதிக்கு அருகிலுள்ள வீடு ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் அங்கு விரைந்தனர். அவ்வீட்டிற்கு வெளியே பல துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் இரண்டு ஆண்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.
“பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணையில் ஈடுபட்டிருந்தபோது, ஹண்டிங்டன் ரோட் (Huntington Road) மற்றும் கெர்பி ரோட் (Kirby Road) பகுதியில் நீல நிற எஸ்யூவி (SUV) ரக வாகனம் ஒன்று கைவிடப்பட்டு, தீ வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் பேரில் மேலும் சில அதிகாரிகள் அங்கு அனுப்பப்பட்டனர்,” என்று பொலிஸார் தங்களது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்னரும், அதன் பின்னரும் சந்தேக நபர்கள் இந்த எஸ்யூவி வாகனத்தையே பயன்படுத்தியுள்ளனர் என்பதைப் புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த வாகனம் டொராண்டோ நகரில் திருடப்பட்டது எனப் பதிவாகியிருந்ததாகக் குறிப்பிட்ட பொலிஸார், தீவிர விசாரணைக்குப் பின்னர், அந்த வாகனத்தில் பயணித்ததாகக் கருதப்படும் மூன்று நபர்களை அடையாளம் கண்டுள்ளனர்.
மே 28 அன்று, டொராண்டோவில் உள்ள வீடு ஒன்றில் நீதிமன்ற சோதனையிடுதல் கட்டளை (Search warrant) மூலம் சோதனை நடத்தப்பட்டு, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர். அத்துடன், வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் என்று நம்பப்படும் டெட்டனேட்டர் (Detonator), பைப் (Pipe), போல்ட்டுகள் (Bolts) மற்றும் டேனரைட் (Tannerite) உள்ளிட்ட பொருட்களும் அங்கு கண்டெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அதே நாளில் வின்ட்சர் (Windsor) மற்றும் ஹாமில்டன் (Hamilton) ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளிலும் மேலதிக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இச்சோதனைகளின் போது மேலும் மூன்று துப்பாக்கிகளும், நீட்டிக்கப்பட்ட தோட்டா இதழ் (Extended magazine) ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டன.
டொராண்டோவைச் சேர்ந்த 27 வயதுடைய மிஷேல் மொஸ்கோன் (Michele Moscone) என்ற நபர் மீது முதல்தரக் கொலைக் குற்றம், வெடிபொருட்களைத் தயாரித்தல் அல்லது வைத்திருத்தல் மற்றும் உரிமம் இன்றி தடைசெய்யப்பட்ட துப்பாக்கியை வைத்திருத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகப் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளென் முசோ (Glen Mousseau, 55) என அடையாளம் காணப்பட்ட இரண்டாவது நபர் மீதும் முதல்தரக் கொலைக் குற்றம், தீவைப்பு (Arson) மற்றும் தடைசெய்யப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய வின்ட்சரைச் சேர்ந்த 48 வயதுடைய ஜெரார்ட் முர்ரே (Gerard Murray) என்ற மூன்றாவது நபர் தற்போது தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமை (Accessory after the fact) மற்றும் தீவைப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.
சந்தேக நபரான முர்ரே, வின்ட்சர் மற்றும் ஜிடிஏ (GTA) ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட தென்மேற்கு ஒன்ராறியோ பகுதிகளில் நடமாடக்கூடியவர் எனப் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“அவரது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதுடன், அவர் இருக்குமிடம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பொதுமக்கள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அவர் சட்ட ஆலோசனையைப் பெற்று உடனடியாக சரணடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார். அவருக்கு அடைக்கலம் கொடுப்பவர்களோ அல்லது உதவுபவர்களோ குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக நேரிடும் என்பதைப் பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறோம்,” என்று பொலிஸ் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.