முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை பிணையில் விடுவிக்குமாறு இன்று (3) கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளின் சமர்ப்பிப்புகளை பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
2006ஆம் ஆண்டு உரிய தகைமைகளைப் பூர்த்தி செய்யாத யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் நிறைவேற்று உத்தியோகத்தர் கடற்படை மாணவராக இணைத்துக்கொண்டமை மற்றும் அதுவரை நடைமுறையில் இருந்த விதிகளுக்குப் புறம்பாக, அரசாங்கப் பணத்தில் பிரித்தானியாவின் அரச கடற்படை கல்லூரியின் பயிற்சிப் பாடநெறி ஒன்றிற்கு யோஷித ராஜபக்ஷவை அனுப்பி வைத்தமை ஆகியவற்றின் மூலம் ஊழல் புரிந்துள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னாள் கடற்படை தளபதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது