இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை இன்று (17) வெள்ளிக்கிழமை ஹரியானாவில் அந்நாட்டுப் பிரதமர் மோடி கொடியசைத்துத் துவங்கி வைத்தார்.
நிலக்கரி, டீசல் இன்ஜின்களுக்கு மாற்றாகவும் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் நோக்கில், ‘ஹைட்ரஜன்’ ரயில்களை இயக்க, இந்திய ரயில் திணைக்களம் அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்., தொழிற்சாலையில், 118 கோடி ரூபாய் செலவில் அதிநவீன ஹைட்ரஜன் ரயில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டில், இந்த ரயில், ரயில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் – லலித் கேரா இடையே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதற்கிடையே, உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள ரயில் திணைக்களத்தின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பின் சிறப்புக் குழுவின் மேற்பார்வையில், ஜிந்த் – சோனிபட் இடையே 10 பெட்டிகளுடன் ஹைட்ரஜன் ரயில் மணிக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் வெற்றிகரமாக இயக்கி சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் 2,600 பேர் பயணிக்க முடியும். 10 பெட்டிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் ரயில் மணிக்கு 75 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இந்நிலையில் இன்று (17) வெள்ளிக்கிழமை ஹைட்ரஜனில் இயங்கும் முதலாவது ரயில் போக்குவரத்தை, ஹரியானா மாநிலம் ஜிந்த் நகரில் இந்தியப் பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.
ஜேர்மனி, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அடுத்தபடியாக ஹைட்ரஜன் ரயிலை இயக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
இந்த ரயில், டீசலுக்குப் பதிலாக, ஹைட்ரஜன் எரிபொருள் செல்களை பயன்படுத்துகிறது. இதன்மூலம் இயக்கப்படும் இந்த ரயிலில் இருந்து கரியமில வாயு போன்ற நச்சு புகைக்கு பதிலாக, துாய்மையான நீராவி மட்டுமே வெளிவரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.