மீண்டுமொரு யுத்தம் ஏற்படுவதை நாம் நிச்சயம் தடுப்போம்” – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

சுதந்திரமான தேசத்தின் பெருமைக்காகத் தங்களது உயிர்களைத் தியாகம் செய்த அனைத்து மாவீரர்களினதும் எதிர்பார்ப்புகளைத் தனது தோள்களில் சுமந்துள்ள தற்போதைய அரசாங்கம், அமைதி மற்றும் அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்மாதிரியான நாட்டைக்கட்டியெழுப்புவதற்கு உறுதியுடன் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

எல்லையற்ற அன்பு, அஹிம்சை மற்றும் அனைத்து உயிரினங்கள் மீதான கருணையை மையமாகக் கொண்ட பௌத்த தர்மத்தினால் பல நூற்றாண்டுகளாக வழிநடத்தப்பட்டு வரும் இலங்கை, மனிதநேயம் இனப் பிரிவினைகளுக்கு அப்பாற்பட்டு ஓங்கி நிற்கும் ஒரு நாடாகும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். இத்தகைய உத்வேகம் அளிக்கும் சமுதாயத்தின் மீது எவ்வளவு சிறப்பானதொரு தேசத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களிடையே வெறுப்பையும் கோபத்தையும் விதைக்கும் அழிவுகரமான மற்றும் பழங்குடிவாத (tribalistic) பாதையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, தற்போதைய அரசாங்கம் மக்களின் உயிர்களைப் பாதுகாத்து, நாட்டை ஒற்றுமை, அபிவிருத்தி மற்றும் செழிப்பை நோக்கி இட்டுச்செல்லும் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். நாட்டை வெற்றியை நோக்கி இட்டுச் செல்வதற்காக அரசாங்கம் இந்தப் பாதையில் அச்சமின்றியும் உறுதியுடனும் பயணிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள ரணவிரு (மாவீரர்) நினைவிடத்தில் இன்று (19) பிற்பகல் நடைபெற்ற 17 ஆவது தேசிய மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாரிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த வெற்றியைக் குறிக்கும் தேசிய மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு, முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று பிற்பகல் பத்தரமுல்லையில் உள்ள மாவீரர் நினைவிடத்தில் பெருமையுடன் நடைபெற்றது.

ரணவிரு சேவா அதிகார சபையினால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் இந்த நினைவேந்தல் நிகழ்வில், இந்த ஆண்டு விசேட அம்சமாக பெருமளவிலான மாவீரர் குடும்பங்கள் கலந்துகொள்வதற்கான கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன.

அங்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் உரையாற்றுகையில்:

“நமது சமகால வரலாற்றில் தாய்நாட்டை மீட்பதற்காக அளப்பரிய பங்களிப்பை வழங்கிய நமது மாவீரர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செலுத்துவதற்காக நாம் இன்று இங்கு கூடியுள்ளோம்.

யுத்தம் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இன்றைய நாளில், நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூரவும், அவர்கள் எத்தகைய நோக்கங்களுக்காகப் போராடினார்களோ அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் இந்த மாவீரர் நினைவிடத்தின் முன்னால் நாம் கூடியிருக்கிறோம்.

இந்தத் தருணத்தில், சுதந்திர தேசத்தின் பெருமைக்காகத் தங்களது உயிர், இரத்தம் மற்றும் கண்ணீரைத் தியாகம் செய்த அனைத்து மாவீரர்களையும் நாம் மரியாதையுடன் நினைவு கூருகிறோம். தமக்காக வாழாது, பிறருக்காகவும் நாட்டுக்காகவும் தங்களது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு இந்த தேசத்தின் அஞ்சலியையும் மரியாதையையும் செலுத்துகிறோம்.

குறிப்பாக, இத்தகைய வீரம் செறிந்த புதல்வர்களையும் புதல்விகளையும் இந்தத் தாய்நாட்டிற்கு அன்பளிப்பாக வழங்கிய பெற்றோரை நாம் கௌரவிக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு வழிகளில் இந்த நினைவேந்தலில் பங்கேற்கலாம். இந்த நினைவிடத்தில் பொறிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பெயர்களில், உங்களில் சிலர் உங்களது தந்தையைத் தேடலாம். மற்றவர்கள் கணவர், அன்புக்குரியவர், உறவினர், சகோதரர், நெருங்கிய நண்பன் அல்லது தோழனைத் தேடலாம். அவர்கள் உங்களதும் என்னதும் நாட்டின் பாதுகாப்பிற்காக மட்டுமன்றி, அதற்கும் மேலான உன்னத இலட்சியங்களுக்காகவே தங்களது உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர்.

மற்றவர்கள் தங்களது உயிர்களைத் தியாகம் செய்ததைப் போலவே, தங்களது உடல் உறுப்புக்களை தியாகம் செய்த அந்தச் சகோதர சகோதரிகள், என்றும் எமது இதயங்களில் மாவீரர்களாகவே நிலைத்திருப்பார்கள் என்று நான் கூற விரும்புகிறேன். ஒரு தேசமாக, உங்களது இந்த அளப்பரிய தியாகம் மற்றும் அர்ப்பணிப்பின் பலன்களை நாம் இன்று அனுபவித்து வருகிறோம்.

உங்களது தியாகமும் அர்ப்பணிப்பும் இல்லாது போயிருந்தால், நாம் இன்றும் ஒரு பயங்கரமான சூழ்நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கக்கூடும். இந்தத் தாய்நாட்டை மீட்பதில் மிக முக்கிய பங்காற்றிய குழுவினராக நீங்கள் வரலாற்றில் இடம்பிடிப்பீர்கள் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். இருப்பினும் அந்தத் தியாகத்திற்குள் இன்னும் பல எதிர்பார்ப்புகள் இருந்தன, அது ஒரு அமைதியான நாட்டிற்கான எதிர்பார்ப்பாகும். யுத்தம் மற்றும் மோதல்களால் வரையறுக்கப்பட்ட ஒரு நாட்டை மற்ற எவரையும் விட நீங்களே நிராகரிக்கிறீர்கள். யுத்தம் எவ்வளவு அழிவுகரமானது மற்றும் பயங்கரமானது என்பதை மற்ற எவரையும் விட நீங்கள் நன்கு அறிவீர்கள். எனவே, இந்தத் தாய்நாட்டிற்குள் அமைதிக்கான மிகப்பெரிய அழைப்பும் எதிர்பார்ப்பும் உங்களுக்குள்ளேயே இருப்பதாக நான் நம்புகிறேன்.

அதே நேரத்தில், அபிவிருத்தியடைந்த தேசமொன்றிற்கான எதிர்பார்ப்பும் அங்கு இருந்தது. தாய்நாட்டை மீட்பதற்கான போராட்டத்துடன் இணைந்து, இந்நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றும் நம்பிக்கையையும் நீங்கள் கொண்டிருந்தீர்கள். நீதியும் சட்டத்தின் ஆட்சியும் கொண்ட, உலகில் வெற்றிபெறக்கூடிய ஒரு நாட்டை நீங்கள் எதிர்பார்த்தீர்கள். உயிர்த்தியாகம் செய்தவர்கள் சுமந்து சென்ற எதிர்பார்ப்புகள் அவைதான். இந்த மாவீரர் நினைவிடத்தின் முன்னால் நின்று, அவர்கள் தொலைநோக்காகக் கொண்டிருந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்வோம் என நான் உத்தியோகபூர்வமாக உறுதியளிக்கிறேன். அவர்களின் எதிர்பார்ப்புகளை நாம் ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம் என உறுதியளிக்கிறேன்.

நாம் வெற்றியைத் தம்பட்டம் அடிக்கும் போதெல்லாம், நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. ஒருபோதும் திரும்பி வராத தந்தையருக்காக இன்னும் வாசலில் காத்திருக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இனி ஒருபோதும் தந்தையின் பாசம் கிடைக்கப்போவதில்லை. அதேபோல், கணவனை இழந்த மனைவிகளின் வலி அவர்களின் வாழ்நாள் முழுவதும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். அவர்களின் கணவர்கள் இனி ஒருபோதும் வரமாட்டார்கள். இது நமக்குத் தெரியும். தாங்கள் இழந்த பிள்ளையின் நினைவுகளைச் சுமந்தபடி, எஞ்சியிருக்கும் பிள்ளைகளைப் பார்க்கும் தாய்மார்களும் தந்தையர்களும் இருக்கிறார்கள். அந்தப் பெற்றோருக்கு அவர்களின் பிள்ளை இனி ஒருபோதும் கிடைக்க மாட்டாது என்பதை நாம் அறிவோம். அவர்கள் அனைவரும் இந்த மாவீரர் நினைவிடத்தில் தங்களுக்குப் பிரியமானவர்களைத் தேடுகிறார்கள். அவர்களின் இதயங்களின் ஆழத்தில் அவர்களின் கணவர், பிள்ளை அல்லது சகோதரர் இருக்கிறார்கள். ஆயினும், அவர்கள் இந்த நினைவிடத்தில் செதுக்கப்பட்டுள்ள ஒரு பெயரைத் தேடி, பெருமூச்சுடன் தங்கள் நெஞ்சில் கையை வைக்கிறார்கள்.

இந்தத் துயரத்திற்கு நம்மால் எப்போதாவது உண்மையாகப் பதிலளிக்க முடியுமா? மறைந்த மாவீரர்களை நினைவு கூருவது மட்டும் போதுமா? அவர்களின் தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்துவது மட்டும் போதுமா? உயிருடன் இருக்கும் நமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு, அவர்கள் கனவு கண்ட அரசை உருவாக்குவதாகும்.

ஒவ்வொரு ஆபத்திலும், ஒவ்வொரு அச்சுறுத்தலிலும் தேசத்தைப் பாதுகாக்க அவர்கள் முன்வந்தனர். எதிரிகளின் அச்சுறுத்தல்களாக இருந்தாலும் சரி, இயற்கை பேரிடர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் தியாகத்தின் தனித்துவமான பணியை நிறைவேற்றினர். யுத்த காலத்தின் போது நாட்டைக் காத்ததைப் போலவே, பேரிடர் காலங்களிலும் மற்றவர்களின் உயிர்களைக் காப்பாற்ற அவர்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்தனர். எனவே, அவர்கள் என்றும் எமது இதயங்களில் நீங்காத இடத்தைப் பிடித்திருப்பார்கள் என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம்.

கடந்த ஆண்டு நான் கூறியது போல், நாம் ஒரு சந்திப்பில் நிற்கிறோம். அறியாமைக்கு பதிலாக அறிவைத் தேட வேண்டும். பிரிவினைக்கு பதிலாக ஒற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டும். தேக்கநிலைக்கு பதிலாக முன்னேற்றத்தை நோக்கி நகர வேண்டும். நான் அன்று கூறியது போல், நம் முன் இரண்டு பாதைகள் உள்ளன. ஒன்று மக்களிடையே வெறுப்பையும் கோபத்தையும் பரப்பும் அழிவுகரமான மற்றும் பழங்குடிவாதப் பாதை. மற்றொன்று மக்களின் உயிர்களைப் பாதுகாத்து, இந்நாட்டை ஒற்றுமை, அபிவிருத்தி மற்றும் செழிப்பை நோக்கி இட்டுச்செல்லும் பாதை. மிகவும் கடினமான தருணங்களிலும் நாம் இரண்டாவது பாதையையே தேர்ந்தெடுப்போம் என்று நான் நம்புகிறேன். இன்று உங்கள் முன்னிலையில், அந்தப் பாதையில் அச்சமின்றியும் உறுதியுடனும் பயணிப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

வரலாற்றில் முதன்முறையாக, இந்த மாற்றத்தின் மூலம் மக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டிய ஒரு குடியரசு உருவாகியுள்ளது. இது வருங்கால சந்ததியினருக்கான, வார்த்தையின் முழுமையான அர்த்தத்திலான ஒரு மக்கள் குடியரசாகும். இன்று நாம் மனிதாபிமானமிக்க இலங்கை தேசத்தை உருவாக்குவதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பயணம் பின்னடைவுகளை எதிர்கொள்ளும் நெகிழ்ச்சித்தன்மை மற்றும் மனஉறுதியின் சுடர்கள் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது அசாதாரணமான கஷ்டங்கள் மற்றும் துயரங்களால் குறிக்கப்பட்டுள்ளது. ஆயினும், இந்த கடினமான பயணத்தின் இறுதி இலக்கு இந்நாட்டை ஒரு பிரகாசமான மற்றும் முன்மாதிரியான நாடாக மாற்றுவதாகும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதுவே இந்த மாவீரர்களின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது, அதை நிறைவேற்றும் பொறுப்பு நமக்கு உண்டு.

இன்று நாம் முன்னோக்கி எடுத்துச் செல்வது நமக்கிடையே இருக்கும் பிரிக்க முடியாத மனிதாபிமான உணர்வைத்தான். சர்வதேச அரங்கில் இலங்கையின் பிம்பத்தை நாம் மேம்படுத்தி வருகிறோம். சட்டத்தின் ஆட்சியையும் நீதித்துறையின் சுதந்திரத்தையும் மதிக்கும் நாடாக எமது நாட்டை மாற்றி வருகிறோம். இந்நாட்டைக் காப்பாற்றுவதற்காகத் தங்களது உயிர்களைத் தியாகம் செய்த அனைவரினதும் எதிர்பார்ப்புகளை எமது தோள்களில் சுமந்து, ஒரு முன்மாதிரியான நாட்டை உருவாக்குவதற்கான உறுதியான பயணத்தில் நாம் ஈடுபட்டுள்ளோம்.

யுத்தம் உலகைத் துண்டு துண்டாக உடைத்துவிடும். அமைதி மட்டுமே அதனை ஒன்றிணைக்கும். பிணக் குவியல்களின் மேல் மனிதாபிமான சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியாது. இரத்த ஆறுகளுக்கு மத்தியில் அமைதிக்கான ஆலயங்கள் எழ முடியாது. வெடிக்கும் குண்டுகள் மற்றும் தோட்டாக்கள் மீது எதிர்கால சந்ததியினருக்கு நிம்மதியான ஒரு நாட்டையோ அல்லது உலகையோ உருவாக்க முடியாது. யுத்தம் என்பது ஒரு பேரழிவு. எனவே, யுத்தத்தின் கதையை நாம் வரலாற்றுடன் முடிவுக்குக் கொண்டு வந்து, நிகழ்காலத்தில் நிலையான அமைதி வழிபாட்டை ஏற்றுக்கொண்டுள்ளோம்.

இந்நாட்டின் முப்படைகளும் பாதுகாப்புப் படையினரும் தங்களது கடமையை நிறைவேற்றியுள்ளனர். அவர்கள் பிரிவினைவாதத்திற்கு எதிராகப் போராடினார்கள். இந்தத் தாய்நாடு சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், மலாயர்கள், பரங்கியர்கள் என அனைவருக்கும் சமமாகச் சொந்தமானது, இதில் எங்கு வேண்டுமானாலும் வாழ்வதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு. இந்தத் தாய்நாட்டைப் பிரிக்க முயன்ற முயற்சிகளுக்கு எதிராக நீங்கள் போராடினீர்கள். அவர்கள் ஒரு இனத்திற்கு எதிராகப் போர் தொடுக்கவில்லை. யுத்தத்தின் கொடூரமான விளைவுகளை அனைத்து சமூகங்களும் அனுபவித்தன. இந்த யுத்தத்தினால் ஒரு நாட்டின் இளைஞர்கள் இழக்கப்பட்டனர்.

சுயநலப் போக்குடைய, அதிகார வெறிபிடித்த அரசியல்வாதிகளும் தீவிரவாத நிகழ்ச்சி நிரல்களும் ஒரே நாட்டின் மக்களை இரண்டாகப் பிரித்தன.

அரசியல் அநாகரிகம் மனிதநேயத்தை ஒரு கால்பந்தாக மாற்றியது. இன்றும் கூட சிலர் யுத்தம் நல்லதா கெட்டதா என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். யுத்தம் நல்லதா கெட்டதா என்று தீர்ப்பு வழங்க நான் தயாராக இல்லை. ஆனால் மீண்டுமொரு யுத்தம் ஒருபோதும் ஏற்படாது என்பதை உறுதி செய்வதில் நான் உறுதியாக இருக்கிறேன். என் முன்னால் நிற்கும் மாவீரர்களின் எதிர்பார்ப்பும் அதுதான். யுத்தம் நல்லதா கெட்டதா என்று விவாதிக்க நானும் என் அரசாங்கமும் இங்கு வரவில்லை. மீண்டுமொரு யுத்தம் எப்போதும் வராமல் இருப்பதை உறுதி செய்யவே நாங்கள் இங்கு இருக்கிறோம். இதுவே மாவீரர்களினதும் இந்நாட்டின் அனைத்து தேசப்பற்றுள்ள குடிமக்களினதும் எதிர்பார்ப்பு என்று நான் நம்புகிறேன்.

அதேபோல், சிங்களவர், தமிழர், முஸ்லிம், பரங்கியர் அல்லது மலாயர் என ஒவ்வொரு குடிமகனுக்கும் சமமான சலுகைகளுடன் வாழ்வதற்கான சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும். மனித உரிமைகள், பொறுப்புகள் மற்றும் சலுகைகள் அனைவருக்கும் சமமாகச் சொந்தமானது என்ற நம்பிக்கை சமூகத்திற்குள் பதியப்பட வேண்டும். நமது சமூகம் சக்திவாய்ந்த அதிகாரிகளுக்கு முன்னால் குனியவோ அல்லது பயத்தில் வாழவோ பழகிவிட்டது. சில குழுக்கள் சுதந்திரமான மற்றும் ஜனநாயக நாட்டில் வாழ்வதற்குப் பழகவில்லை. அவர்கள் மோதல்களையும், அவமதிப்புகளையும், அவதூறுகளையும் விரும்புகிறார்கள். ஆனால் நாம் ஒரு ஜனநாயக மற்றும் சுதந்திரமான நாட்டிற்கு நிபந்தனையின்றி அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்.

திறமை, ஆற்றல் மற்றும் தகுதி உள்ள அனைவரும் முன்னேறக்கூடிய ஒரு நாட்டை நாம் உருவாக்க வேண்டும். இதற்கு முன்பு சலுகைகளை அனுபவித்து வந்தவர்களுக்கு இது வேதனையாக இருக்கலாம். மற்றவர்களை ஒடுக்கித் தங்களை விசேடமானவர்களாகக் கருதியவர்கள், இனிமேலும் தங்களை அவ்வாறு நடத்தாதபோது கலக்கமடையலாம். வரலாற்றில் என்றுமில்லாதவாறு தகுதி நிலையைப் பொருட்படுத்தாமல் சட்டம் அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்படும்போது அவர்கள் பதற்றமடையலாம். ஆயினும், உலகளாவிய நீதிக்கும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிலையான முறையில் நிறைவேற்றுவதற்கும் நாம் நிபந்தனையின்றி கடமைப்பட்டுள்ளோம். அதுவும் மறைந்த மாவீரர்களின் எதிர்பார்ப்பாகவே இருந்தது.

நாம் இந்த நினைவேந்தலை நடத்தும் இந்த மாதம் மத ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உலகிற்கு கருணை, அன்பு மற்றும் அமைதியின் செய்தியைக் கொடுத்த புத்தரின் முப்பெரும் உன்னத நிகழ்வுகளை (வைகாசி விசாகம்) நாம் இந்த மாதத்தில்தான் கொண்டாடுகிறோம். பௌத்தம் என்பது அஹிம்சை, கருணை மற்றும் அனைத்து உயிர்களிடத்தும் எல்லையற்ற அன்பைச் செலுத்துவதன் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது.

பல நூற்றாண்டுகளாக நமது நாடு இந்த உன்னத கொள்கைகளின்படியே இயங்கி வருகிறது. ஆயினும், தங்களின் சொந்த அதிகாரம் மற்றும் நலன்களுக்காக வெறுப்பையும் கோபத்தையும் பரப்பும் ஒரு சிறிய சிறுபான்மையினர் இன்னும் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

இலங்கை ஒரு வளமான பல்லின கலாசார அடையாளத்தைக் கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்நாடு பல்வேறு இன, கலாசார, மத மற்றும் மொழி சமூகங்களுக்கு ஒரு அற்புதமான தாயகமாக இருந்து வருகிறது. இந்த யுத்தத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில், இலங்கை தனது வலிமிகுந்த அனுபவங்களைத் தாண்டி முன்னேற முயற்சிக்கிறது. யுத்தம் என்பது மிகவும் வேதனையான ஒரு அனுபவம். இந்தத் துன்பம் எதிர்கால சந்ததியினருக்குக் கடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நாம் உழைத்து வருகிறோம். நிலையான அமைதி மற்றும் சகவாழ்வுக்கான பாலங்களை நாம் அமைத்து வருகிறோம். பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வதும் பாரபட்சமின்மையும் நிலையான அமைதிக்கும் சகவாழ்விற்கும் பெரிதும் பங்களிக்கின்றன.

உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ பாத (சிவனொளிபாதமலை) வழிபாட்டுத் தலத்தில் அனைத்து மதங்களைச் சேர்ந்த பக்தர்களும் ஒன்றாக வழிபடுகிறார்கள். யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரமான பொலன்னறுவையின் பௌத்த விகாரைகளுக்குள் இந்து ஆலயங்கள் உள்ளன. கதிர்காமம் தேவாலயம் பௌத்த, இந்து மற்றும் இஸ்லாமிய பக்தர்களுக்கு ஒருசேர புனிதமானதாகும். வடக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து தெற்கில் கதிர்காமம் நோக்கி வரும் யாத்திரீகர்கள் புனித பாதயாத்திரையில் ஒன்றாக இணைகிறார்கள். கிரிவிகாரைக்குச் செல்லும் பக்தர்கள் கதிர்காமம் ஆலயத்திற்கும் செல்கிறார்கள். இயற்கை பேரிடர் காலங்களில் மனிதநேயம் இனப் பிரிவினைகளுக்கு அப்பாற்பட்டு நிற்கிறது. கஷ்டமான காலங்களில் மக்கள் எந்தவொரு பாகுபாடுமின்றி ஒருவருக்குப் பெருமளவில் ஒருவர் உதவுகிறார்கள்.

இத்தகைய உத்வேகம் அளிக்கும் மனித சமூகத்தின் மீது எவ்வளவு அசாதாரணமான ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்? நாம் அனுபவித்த அழிவுகளை வரலாற்றுடன் சுருக்கிக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. பல தசாப்தங்களாக நாம் ஒரு பொருளாதார யுத்தத்தில் சிக்கியுள்ளோம், அந்த யுத்தத்தில் நாம் வெற்றி பெற வேண்டும். பல தசாப்தங்களாக நாம் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எதிரான யுத்தத்தில் சிக்கியுள்ளோம், அதிலும் நாம் வெற்றி பெற வேண்டும். இளைய தலைமுறையினர் ஒரு சுதந்திரமான மற்றும் விடுவிக்கப்பட்ட நாட்டை விரும்புகிறார்கள், அதை நாம் அடைய வேண்டும்.

இந்நாட்டின் இளைய தலைமுறையினருக்கு ஒரு சிறப்பான நாட்டைப் பெற்றுத் தருவதற்கான போராட்டத்தில் நாம் ஈடுபட்டுள்ளோம். குழந்தைகள் பெற்றோரின் அன்பையும் பாதுகாப்பையும் இழக்கும்போது ஒரு நாடு எப்படி அதன் எதிர்காலத்தை வெல்ல முடியும்? அந்தப் போராட்டத்தில் நாம் வெற்றி பெற வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் சமமாகவும் நியாயமாகவும் நடத்தப்படும், இந்த நிலம் அனைவரினதும் தாய்நாடாகக் கருதப்படும் ஒரு நாட்டை உருவாக்குவதற்கான போராட்டத்தில் நாம் வெற்றி பெற வேண்டும்.

இந்நாட்டில் பல தசாப்தங்களாக நீடித்த யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததன் மூலம் இருபது மில்லியன் (இரண்டு கோடி) மக்களின் கண்ணீரைத் துடைத்த அனைவருக்கும் நாம் அஞ்சலி செலுத்துகிறோம். அந்தச் சாதனையில் மாவீரர்கள் ஆற்றிய பங்கு தனித்துவமானது. உங்களின் அந்த உன்னதமான சேவைக்காக மீண்டும் ஒருமுறை எங்களது ஆழ்ந்த மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

யுத்தத்தின் மொழி இனி கேட்காத, அமைதி நிறைந்த ஒரு நாட்டை நோக்கி முன்னேற நான் உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். இனவாதம், மத தீவிரவாதம் மற்றும் சிறிய சீர்குலைக்கும் குழுக்களின் கூச்சல்களுக்கும் நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்நாடு இனி ஒருபோதும் எந்தவொரு இனவாத அல்லது தீவிரவாதக் குழுவிற்கும் இரையாகக் கூடாது. அந்த நோக்கத்திற்காக அனைவரும் ஒன்றிணையுமாறு நான் உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.”

photo-collage.png (42)

அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதும் தமிழ்த் தேசியத்தை அழிக்க முயன்றதும் ராஜபக்ச ஆட்சிக்காலம் தான்!

May 31, 2026

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய

water

கடல் அலையில் சிக்கி மாயமான மூன்று மாணவர்களும் இன்று சடலங்களாக மீட்பு!

May 31, 2026

அம்பாந்தோட்டை – ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களமெட்டிய கடற்பகுதியில் நேற்று(30.05.2026) நீராடிக் கொண்டிருந்த போது இராட்சத அலையில் சிக்கி இழுத்துச்

ssasee

ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

May 31, 2026

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என

vi

யாழ். பொது நூலகம் எரிப்பு: 1981 மே 31 நள்ளிரவில் நடந்தது என்ன?

May 31, 2026

நன்றி: வீரகேசரி நாளிதழ் . இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மிக மோசமான இன வன்முறைச் செயல்களில் ஒன்றான யாழ்ப்பாண

dja

நாகவிகாரைச் சூழலில் வெசாக் வலயம்

May 31, 2026

யாழ்ப்பாணம் நாகவிகாரைச் சூழலில் இராணுவத்தினரால் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்த வெசாக் வலயத்தின் மின்விளக்கு அலங்காரங்களை சனிக்கிழமை (30) வடக்கு மாகாண ஆளுநர்

cha

தரம் குறைந்த நிலக்கரி குறித்து சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்

May 31, 2026

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்ட, தரம் குறைந்த நிலக்கரி நிரம்பிய கப்பலை வலுக்கட்டாயமாக இறக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக்

mano

வட-கிழக்கு தமிழர்களை அவமதிக்கும் விதத்தில் டில்வின் சில்வாவின் கருத்து உள்ளது – மனோ கணேசன்

May 31, 2026

மாகாண சபை தேர்தல் குறித்து டில்வின் சில்வா வெளியிட்டுள்ள கருத்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களை அவர்

cs

சிரியாவில் இருந்து திரும்பிய ISIS தொடர்புடைய பெண்ணுக்கு எதிராக அவுஸ்திரேலியா தீவிர விசாரணை

May 31, 2026

சிரியாவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக எவ்வித விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை அவுஸ்திரேலிய அரசு சமீபத்தில்

Judment

தையிட்டி விகாரைக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இளைஞர்களுக்கு அபராதம்

May 31, 2026

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும்

kana

காணாமல் போன நான்கு கடற்றொழிலாளர்களை தேடும் பணி தீவிரம்

May 31, 2026

வடமராட்சி கடலிலிருந்து கடந்த 27 ஆம் திகதி கடலுக்குச் சென்று காணாமல் போன கடற்றொழிலாளர்கள் நால்வர் தொடர்பில் விசேட அனுமதியுடன்

sl

இலங்கைத் தமிழ் பெண் சென்னையில் கொலை

May 31, 2026

சென்னையில் இடம்பெற்ற மோதலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் நேற்றிரவு (30)

lav

லாவோஸில் 1000 அடி ஆழமான குகைக்குள் சிக்கியவர்களில் நால்வர் மீட்பு

May 31, 2026

லாவோஸின் மத்திய ஷைசோம்போன் மாகாணத்தில் உள்ள நிலத்தடி குகையொன்றில் சுமார் 10 நாட்களாகச் சிக்கியிருந்தவர்களில் நால்வரை மீட்பதற்கு லாவோஸ் மற்றும்