மீகொட பகுதியில் உள்ள வெசாக் தன்சல் (தானப்பந்தல்) ஒன்றில் இடம்பெற்ற கொடிய விபத்துடன் தொடர்புடைய வாகன ஓட்டுநர் வரும் ஜூன் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட இந்தத் துயர சம்பவத்தில் ஏழு பேர் உயிரிழந்ததுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, டபுள்-கேப் (Double-Cab) ரக வாகனத்தை ஓட்டிச் சென்ற 42 வயதுடைய ஓட்டுநர் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மீகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாய் லெவல் (High Level) வீதியில், அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கேப் வாகனம் ஒன்று, லொறி ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது இடதுபுறமாகத் திரும்பி, தன்சலில் வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் கட்டுப்பாட்டை இழந்து புகுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக ஹோமாகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அங்கு அனுமதிக்கப்பட்டபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மற்றும் பதின்ம வயது சிறுமி உட்பட மேலும் மூவர் என மொத்தம் ஏழு பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பலியானவர்கள் ஹன்வெல்ல, அவிசாவளை மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
விபத்தை ஏற்படுத்திய பின்னர் தப்பியோட முயன்ற சந்தேக நபரை மீகொட சந்தியில் கடமையில் இருந்த அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்ததுடன், கேப் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். விபத்தின் போது ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாகவும், அவரிடம் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லை என்றும், காலாவதியான ஆவணங்களைக் கொண்ட வாகனத்தை அவர் செலுத்தியுள்ளதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், மேலதிக விசாரணைகள் தொடரும் நிலையில் ஜூன் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.