சில்லிவக்: கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்திலுள்ள புகழ்பெற்ற ‘கல்டஸ் லேக்’ நீர்விளையாட்டுப் பூங்காவில் (Cultus Lake Waterpark) திங்கட்கிழமை நேரிட்ட எதிர்பாராத மின்சார விபத்தொன்றில் (Electrical incident), 12 சிறுவர்கள் காயமடைந்து அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரக்கால மீட்புக் குழுவினர், காயமடைந்த 12 சிறுவர்களையும் மீட்டனர். அவர்களில் இருவர் ஹெலிகாப்டர் (Air ambulance) மூலமும், மற்றைய 10 பேர் தரைவழி ஆம்புலன்ஸ் மூலமும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட அனைவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்த போதிலும், தற்போது அவர்களது நிலைமை சீராக (Stable) உள்ளதாக சில்லிவக் ஆர்.சி.எம்.பி (RCMP) பொலிஸ் அதிகாரி கார்மென் கீனர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது ஒரு தற்செயலான விபத்து மாத்திரமே என்றும், இதில் சதி வேலைகளோ அல்லது திட்டமிட்ட மனிதத் தவறுகளோ இருப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை என்பதால், பொதுமக்களுக்கு மேலதிக ஆபத்துகள் எதுவும் இல்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இரும்புத் தண்டவாளத்தைத் தொட்டபோது விபத்து:
விபத்து குறித்து நீர்விளையாட்டுப் பூங்காவின் தலைமை நிர்வாக அதிகாரி என்ட்ரூ ஸ்டீனன்பெர்க் (Andrew Steunenberg) செய்தியாளர்களிடம் கூறுகையில்:
“பூங்காவிலுள்ள ‘ஸீரோ டு 60 ரேஸ்வே’ (Zero to 60 Raceway) என்ற விளையாட்டுப் பகுதிக்கு அருகில் சிறுவர்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்த போதே இந்தத் தீவிர விபத்து நடந்துள்ளது. அங்கு அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்புத் தண்டவாளத்தை (Metal railing) சிறுவர்கள் தொட்டபோது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின்சார ஒழுக்கே (Electrical anomaly) இதற்குக் காரணம் எனத் தெரிகிறது”
என்று அவர் விளக்கமளித்தார்.
மேலும், தங்களது பூங்கா வரலாற்றில் இதுபோன்றதொரு விபத்து இதுவரை நடந்ததே இல்லை என்றும் அவர் கவலை வெளியிட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுவர்களில் 11 பேர் ‘மினிகடா மிடில் ஸ்கூல்’ (Minnekhada Middle School) பாடசாலையைச் சேர்ந்த 6 மற்றும் 7 ஆம் தர மாணவர்கள் என்பதுடன், அவர்கள் பாடசாலைச் சுற்றுலா (Field trip) வந்திருந்தபோதே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.
தீவிர விசாரணை:
இந்த விபத்து மாகாண மின்சார விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு அல்ல என்றும், பூங்காவின் சொந்த மின்சாதன உபகரணங்களிலேயே இந்த மின் கசிவுப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றும் ‘பி.சி ஹைட்ரோ’ (B.C. Hydro) மின்சார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதையடுத்து, விபத்து குறித்து மாகாண பணியிடப் பாதுகாப்பு அமைப்பான ‘வேர்க்ஸேஃப் பி.சி’ (WorkSafeBC) மற்றும் தொழில்நுட்ப பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், நீர்விளையாட்டுப் பூங்கா அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு முற்றாக மூடப்படும் என்றும், பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட பின்னரே மீண்டும் திறக்கப்படும் என்றும் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.