கொழும்பு: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சி, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆசியுடனேயே தொடர்ந்து இயங்கி வருவதாகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கட்சியில் பசில் ராஜபக்ஷவின் எதிர்காலப் பங்களிப்பு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே நாமல் ராஜபக்ஷ இதனைத் குறிப்பிட்டார்.
அரசியலில் தீவிரமாக ஈடுபடுவது குறித்த இறுதி முடிவு பசில் ராஜபக்ஷவின் தனிப்பட்ட தீர்மானமாகும் என்றும் அவர் கூறினார்.
இது குறித்து நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்:
“எங்கள் கட்சிக்கு அவரது (பசில் ராஜபக்ஷவின்) ஆசி என்றும் உள்ளது. அதற்கு அப்பால், அவர் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டுமா இல்லையா என்பதை அவரே தான் தீர்மானிக்க வேண்டும். அந்த முடிவை என்னால் எடுக்க முடியாது.”
என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அனைவரும், அரசியல் தலைமைத்துவத்தை இப்போது அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
“அரசியல் இனி அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றே தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோர் நம்புகிறார்கள்”
என்றும் அவர் மேலும் கூறினார்.
கட்சியின் பரந்த அரசியல் மறுசீரமைப்புச் செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, கிராம மட்டத்தில் புதிய அமைப்பாளர்களை நியமித்தல் மற்றும் வளர்ந்து வரும் இளம் தலைவர்களை உருவாக்குவதன் மூலம், பொதுஜன பெரமுனவின் அடிமட்டக் கட்டமைப்பை (Grassroots structure) வலுப்படுத்துவதில் தற்போது கட்சி கவனம் செலுத்தி வருவதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.