உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிமித்தம், தம்மைக் கைது செய்வதோ அல்லது தடுப்புக்காவலில் வைப்பதோ தடுக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பேராணை மனு (Writ Petition) ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள 11 முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
-
பயணத்தடை உத்தரவு: ஈஸ்டர் தாக்குதல் குறித்து பிரித்தானியாவின் ‘சனல் 4’ (Channel 4) ஆவணப்படத்தில் அசாத் மௌலானா முன்வைத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலான விசாரணைகள் நிமித்தம், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தமக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்துள்ளதை ஊடக அறிக்கைகள் வாயிலாகவே தாம் அறிந்துகொண்டதாகக் கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.
-
விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு: உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என மறுத்துள்ள அவர், இக்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை அதிகாரிகள் இதுவரை தன்னிடம் எவ்வித கேள்விகளையும் எழுப்பவில்லை என்றும், எந்த நேரத்திலும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
-
கைது செய்யத் தேவையில்லை: நீதிமன்றத்திற்கு அறிவிக்காமல் தாம் நாட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்றும், சாட்சிகள் எவருக்கும் இடையூறு விளைவிக்க மாட்டேன் என்றும் உறுதியளித்துள்ளதால், தம்மைக் கைது செய்யவோ அல்லது தடுப்புக்காவலில் வைக்கவோ அவசியமில்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
அசாத் மௌலானாவுடன் தொடர்பில்லை: தற்போதைய புலனாய்வு விசாரணைகள் அனைத்தும், தற்போது வெளிநாட்டில் வசிக்கும் அசாத் மௌலானா ‘சனல் 4’ நிகழ்ச்சியில் கூறிய கூற்றுகளையே முதன்மையாகக் கொண்டுள்ளன என்றும், தாம் மௌலானாவை ஒருபோதும் சந்தித்ததில்லை என்பதோடு அவருக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கோட்டாபய தெரிவித்துள்ளார்.
-
சாணி அபேசேகர மீதான குற்றச்சாட்டு: குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சாணி அபேசேகரவுக்கு எதிராக இந்த மனுவில் பலத்த வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. தாம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் சாணி அபேசேகர சிஐடி பதவியிலிருந்து நீக்கப்பட்டமை மற்றும் அதன் பின்னர் நிகழ்ந்த சம்பவங்கள் காரணமாக, அவர் தன் மீது தனிப்பட்ட விரோதத்தைக் கொண்டிருக்கலாம் என கோட்டாபய குற்றம் சுமத்தியுள்ளார்.
-
சிஐடி விசாரணைகளின் குறைபாடுகள்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து அமைக்கப்பட்ட பல ஆணைக்குழுக்கள் மற்றும் விசாரணை அறிக்கைகள், சிஐடி முன்னெடுத்த விசாரணைகள் உள்ளிட்டவற்றில் சிரேஷ்ட சட்ட அமலாக்க அதிகாரிகளின் குறைபாடுகள் மற்றும் தோல்விகளைச் சுட்டிக்காட்டியுள்ளதாக மனுவில் வாதிடப்பட்டுள்ளது.
-
ஆதாரங்கள் இல்லை: ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, நாடாளுமன்றத் தெரிவுக்குழு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் சனல் 4 விசாரணை அறிக்கைகள் எவற்றிலும் தமக்கு இந்தத் தாக்குதலுடன் தொடர்பிருப்பதாக எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை என்றும், அசாத் மௌலானாவின் குற்றச்சாட்டு மட்டுமே தமக்கு எதிராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
சனல் 4 குழுவின் அறிக்கை: சனல் 4 ஆவணப்படம் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் கண்டுபிடிப்புகளையும் இந்த மனு சுட்டிக்காட்டியுள்ளது. அசாத் மௌலானா சுமத்திய குற்றச்சாட்டுகள் அந்த விசாரணையின் போது நிரூபிக்கப்படவில்லை என அது குறிப்பிட்டுள்ளது.
-
எஃப்.பி.ஐ (FBI) விசாரணை: உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவின் எஃப்.பி.ஐ விரிவான விசாரணைகளை நடத்தியிருந்தது என்றும், தமது ஜனாதிபதி பதவிக்காலத்தில் எஃப்.பி.ஐ-இன் மேலதிக ஈடுபாட்டைக் கோரியபோது, முழுமையான விசாரணை ஏற்கனவே நடத்தப்பட்டுவிட்டதாகவே பதில் கிடைத்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
-
அடிப்படை உரிமை மீறல்: தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் பக்கச்சார்பு இருக்க வாய்ப்புள்ளது என்றும், தம்மைக் கைது செய்யவோ அல்லது தடுப்பில வைக்கவோ முயல்வது சட்டவிரோதமானது, பகுத்தறிவற்றது, நியாயமற்றது மற்றும் இயற்கையான நீதிக்கும் தமது அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது என்றும் கோட்டாபய வாதாடியுள்ளார்.
-
இடைக்காலத் தடை கோரிக்கை: இந்த மனுவின் மீதான இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக அதிகாரிகள் தம்மைக் கைது செய்வதற்கோ, தடுப்புக்காவலில் வைப்பதற்கோ அல்லது தனது சுதந்திரத்தைப் பறிப்பதற்கோ தடை விதிக்கும் பேராணை உத்தரவை (Writ) கோட்டாபய ராஜபக்ஷ இந்த மனுவின் மூலம் கோரியுள்ளார்.