மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் காரணமாக பணவீக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதாகவும், இதனால் உலகப் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள உலகப் பொருளாதார நிலைவரம் மற்றும் வாய்ப்புகள் தொடர்பில் இடைக்கால அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த ஜனவரி மாதம் கணிக்கப்பட்டதை விட உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதார கணிப்பீடு
2025 ஆம் ஆண்டு: 3.0% (மதிப்பீடு)
2026 ஆம் ஆண்டு: 2.5% (முன்னர் கணிக்கப்பட்டதை விட 0.2% குறைவு)
2027 ஆம் ஆண்டு: 2.8% (மிதமான மீட்சி)
வலுவான தொழிலாளர் சந்தை, நுகர்வோர் தேவை மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த வர்த்தக முதலீடுகள் பொருளாதாரத்திற்கு ஓரளவிற்கு ஆதரவளித்தாலும், உலகளாவிய பொருளாதாரப் பார்வை பலவீனமடைந்துள்ளதாக ஐந்தொகை அறிக்கை கூறுகிறது.
பணவீக்கம் மற்றும் எரிசக்தி நெருக்கடி
எரிசக்தி விலைகளின் திடீர் உயர்வு காரணமாக எரிசக்தி நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியுள்ள போதிலும், அது சாதாரண குடும்பங்கள் மற்றும் வணிகங்களின் மீதான செலவின அழுத்தத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
அபிவிருத்தியடைந்த நாடுகள்: பணவீக்கம் 2025 இல் 2.6% இலிருந்து 2.026 இல் 2.9% ஆக உயரும்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள்: பணவீக்கம் 4.2% இலிருந்து 5.2% ஆக அதிகரிக்கும்.
உர விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல்களால் விவசாய உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளன. இது பயிர் விளைச்சலைக் குறைத்து, உணவுப் பொருட்களின் விலைகளை மேலும் உயர்த்தக்கூடும் என ஐநா எச்சரித்துள்ளது.
பிராந்திய ரீதியான பொருளாதார தாக்கம்
மத்திய கிழக்கு நெருக்கடியால் மேற்கு ஆசியா மிகக் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. உள்கட்டமைப்பு சேதம், வர்த்தகம் மற்றும் சுற்றுலாப் பாதிப்பு காரணமாக அங்கு பொருளாதார வளர்ச்சி 3.6% இலிருந்து 1.4% ஆகக் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய நிதிச் சந்தைகள் ஓரளவு மீளெழுச்சியுடன் காணப்பட்ட போதிலும், பணவீக்க எதிர்பார்ப்புகள் காரணமாக குறுகிய கால பிணைப்பத்திரங்களின் வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.