உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விசாரணைகளுடன் தொடர்புபடுத்தி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுடனான சந்திப்புகள் குறித்து நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பதிலடி கொடுத்துள்ளார். பிள்ளையான் சிறையிலிருந்த போது அவரைத் தான் சென்று சந்தித்தமை “ஒன்றும் இரகசியமான விடயமல்ல” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து நாமல் ராஜபக்ஷ விடுத்துள்ள விசேட அறிக்கையில், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தான் பிள்ளையானைச் சந்திக்கச் சென்றதற்கான சிறைச்சாலை பதிவேடுகள் (Prison records) தற்போதும் மிகத் தெளிவாகக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த காலப்பகுதியில் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது தங்களின் கூட்டணியின் ஒரு அங்கமாக இருந்ததுடன், 2015 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலும் இணைந்து போட்டியிட்டிருந்ததாக அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷவின் முழுமையான அறிக்கை வருமாறு:
“2018/19 காலப்பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் சிறையிலிருந்த போது, நான் அவரைச் சென்று சந்தித்தது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. உண்மையில், நான் அங்கு சென்றதற்கான சிறைச்சாலை பதிவேடுகள் தற்போதும் உள்ளன. அக்காலப்பகுதியில் அவர் எமது கூட்டணியின் பங்காளியாக இருந்ததுடன், 2015 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலும் எங்களுடன் இணைந்தே போட்டியிட்டிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) பிரான்ஸ் வரை சென்றுள்ளதாகக் கூறப்படும் விடயம், தற்போதைய அரசாங்கத்தின் முன்னுரிமைகள் குறித்த கேள்விகளை இயல்பாகவே எழுப்புகிறது. பிள்ளையானுக்கான எனது சாதாரண சந்திப்பை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே அதிகாரிகள் அவ்வளவு தூரம் பயணித்திருக்கிறார்கள் என்றால், அது அப்பட்டமான பொது மக்கள் பண விரயமாகும். எனக்குத் தெரிந்தவரை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பிள்ளையான் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்படவில்லை. அப்படியிருக்க, இவ்வாறான ஊடக நாடகங்கள் மூலம் அரசாங்கம் யாரை திருப்திப்படுத்த முயல்கிறது?
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கமானது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு கதைகளைக் கூறி வந்துள்ளது. தற்போது இந்தத் துயரச் சம்பவத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் தனது அரசியல் எதிராளிகளை இலக்கு வைக்க முயலுமானால், அது உண்மையான பதில்களையும் நீதியையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும்.
நாங்கள் எந்தவொரு நியாயமான விசாரணைக்கும் முகங்கொடுக்கத் தயாராக இருக்கிறோம் என்பதுடன், எந்தவொரு சந்தேகத்தையும் பகிரங்கமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் தீர்ப்பதற்குக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். இவ்வாறான அரசியல் நாடகங்கள் மற்றும் ஊடகத் தலைப்புச் செய்திகளில் கவனம் செலுத்துவதை விடுத்து, நாட்டின் மக்களுக்கு அர்த்தமுள்ள முடிவுகளை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.”