யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால், களஞ்சியசாலையில் இருந்த 60 வீதத்துக்கும் அதிகமான மருந்துகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக வைத்தியசாலையின் முன்னாள் பிரதி பணிப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ச. சிறிபவானந்தராசா தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சிய அறையில் இன்றைய தினம் சனிக்கிழமை (9) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டிருந்த நிலையில், பலத்த போராட்டத்தின் மத்தியில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் தீயில் சேதமடைந்த பகுதிகளை இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபவானந்தராசா நேரில் சென்று பார்வையிட்டார்.
அவ்வேளை அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மருந்து களஞ்சியசாலையில் புற்றுநோய்க்கான மருந்துகள், சத்திர சிகிச்சைக்கான மருந்துகள் உள்ளிட்ட பெறுமதியான மருந்துகள் பல பாதுகாக்கப்பட்டிருந்தன. தீ விபத்தினால் அதில் சுமார் 60 வீதமானவை தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
தற்போது வைத்தியசாலையின் அவசர தேவைக்கான மருந்துகள், வைத்தியசாலையின் உள்ளக மருந்தகத்தில் காணப்படுகின்றன. அவற்றினை விட மேலதிகமாக மாவட்டத்தின் பிற வைத்தியசாலைகள் மற்றும் வவுனியா, அநுராதபுரம் ஆகிய வைத்தியசாலைகளிலும் இருந்து மருந்துகளை எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனூடாக எதிர்வரும் சில தினங்களுக்கு விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறுவோர், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்கு வருவோர் ஆகியோருக்கு மருந்துகளை விநியோகிக்க முடியும். அதற்கு இடையில் கொழும்பில் இருந்து மருந்துகளை எடுத்து வர நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதேவேளை தீ விபத்து தொடர்பிலான விசாரணைகளை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினரும் நடத்தவுள்ளனர்.
அவர்கள் கொழும்பில் இருந்து திங்கட்கிழமையே வைத்தியசாலைக்கு நேரில் வந்து விசாரணை செய்வார்கள். அதுவரை, களஞ்சியசாலை பொலிஸாரின் பாதுகாப்பில் இருப்பதுடன், தீயில் எரிந்த மருந்துகளையும் பாதுகாப்பாக வைத்திருந்து, விசாரணைகளின் பின்னரே அவற்றினை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.