சென்னை:
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 383 அம்மா உணவகங்களில், தினமும் உணவருந்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் தினசரி சராசரியாக 67,164 பயனாளிகள் அம்மா உணவகங்களை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 1,04,102 ஆக அதிகரித்துள்ளது.
ஏழை எளிய மக்கள், கூலி வேலை செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் சென்னைக்கு பணி நிமித்தமாக வருபவர்களின் பசியைப் போக்கும் வகையில், மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் மற்றும் முக்கிய அரசு மருத்துவமனைகளிலும் அம்மா உணவகங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. காலை உணவாக இட்லி, பொங்கல், மதிய உணவாகச் சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கருவேப்பிலை சாதம், தயிர் சாதம் மற்றும் மாலை வேளையில் சப்பாத்தி என மிகக்குறைந்த விலையில் தரமான உணவுகள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில், அம்மா உணவகங்களில் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, உணவருந்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததோடு, அம்மா உணவகங்களின் வாயிலாகக் கிடைக்கும் வருவாயும் ஏப்ரல் மாதத்தில் இருந்த 87,60,489 ரூபாயிலிருந்து, தற்போது 1,35,78,548 ரூபாயாக உயர்ந்துள்ளது. பொதுமக்களிடையே இந்த உணவகங்களுக்கு ஏற்பட்டுள்ள வரவேற்பு மாநகராட்சி நிர்வாகத்திற்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது.
#AmmaUnavagam #Chennai #GCC #TamilNadu #PublicWelfare #GovernmentScheme #ChennaiCorporation #AffordableFood #Welfare #TamilNaduNews #BMNews #UrbanWelfare #ChennaiLife #SocialJustice #TamilNews #LatestUpdate #BreakingNews #GovtService #TamilNaduGovernment #Development