இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலவும் பொதுவான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்ட ‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு’ (Colombo Security Conclave) எனும் முன்னெடுப்பை முழுமையாக உத்தியோகபூர்வமாக்குவதற்கு இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் நெருங்கி வருவதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர், பிராந்தியத்தில் உருவாகி வரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்கான புதுமையான கட்டமைப்புகள் குறித்து இந்தியாவும் இலங்கையும் பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார். கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் கீழான ஒத்துழைப்புகள் ஏற்கனவே பல்வேறு மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவை முறையாக நிறுவனமயப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் தலைமையகமாகச் செயல்படும் இடைக்காலச் செயலகம் ஏற்கனவே கொழும்பில் இயங்கி வருவதாக ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி கூறினார். கடந்த சில ஆண்டுகளில், உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்புகள் மூலம் இதற்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்குவதிலும், ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும், இந்த கலந்துரையாடல் தளத்தை ஒரு சர்வதேச அமைப்பின் நிலைக்கு உயர்த்துவதிலும் நிலையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
அவரைப் பொறுத்தவரை, இந்த செயல்முறை தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களும் எட்டப்பட்டுள்ளன, மேலும் தலைமையக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக தற்போது தரப்பினர் காத்திருக்கின்றனர். ஒருமித்த கருத்தின் அடிப்படையில், கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் முதலாவது பொதுச் செயலாளர் இந்திய பிரஜையாக இருப்பார் என்றும், இலங்கையில் சில நடைமுறைத் தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்பட வேண்டியிருப்பதால், அந்த நியமனத்தை இறுதி செய்வதற்கான அங்கீகாரங்களுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிராந்திய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் முக்கியத்துவம் குறித்தும், இந்த அமைப்பு முழுத் திறனுடன் இயங்குவதற்குத் தேவையான எஞ்சிய நடைமுறை நடவடிக்கைகளை விரைவாக முடிப்பது குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் தெரிவித்தார்.
மீதமுள்ள இந்தத் தேவைகள் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என நம்பிக்கை வெளியிட்ட அவர், இது அனைத்து உறுப்பு நாடுகளுக்கும், குறிப்பாக இந்தியப் பெருங்கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகளுக்கும் பரஸ்பர நன்மைகளை வழங்கும் என்பதையும் வலியுறுத்தினார்.