ஆசியக் கடற்பரப்பில் ஈரானிய எண்ணெய் கப்பல் (Oil Tanker) ஒன்றில் அமெரிக்கப் படைகள் ஏறிச் சோதனை நடத்தியுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் (Pentagon) செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள பென்டகனின் அறிக்கையின்படி, ‘எம்/டி டிபானி’ (M/T Tifani) என்ற அந்தப் படகில் அமெரிக்கப் படைகள் எவ்வித அசம்பாவிதங்களுமின்றி ஏறிச் சோதனையிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேசக் கடல் சட்டங்களின் கீழ் வழங்கப்படும் ‘சந்தேகத்தின் பேரில் ஏறிச் சோதனையிடும் உரிமை’ (Right-of-visit maritime interdiction) என்பதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கப்பல் போக்குவரத்து தரவுகளின்படி, இந்தச் சோதனையின் போது குறித்த கப்பல் இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடைப்பட்ட இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இக்கப்பல் போட்ஸ்வானா (Botswana) நாட்டின் கொடியின் கீழ் இயங்குவதாக அடையாளம் காணப்பட்ட போதிலும், பென்டகன் இதனை ‘எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாத (Stateless)’ ஒரு கப்பல் என வர்ணித்துள்ளது.
ஈரானுடன் தொடர்புடைய கடத்தல் வலையமைப்புகளைமுடக்கும் அமெரிக்காவின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டவிரோத வலையமைப்புகளை சிதைக்கவும், ஈரானுக்கு ஆதரவளிக்கும் தடை விதிக்கப்பட்ட கப்பல்களை அவை எங்கு இயங்கினாலும் தடுத்து நிறுத்தவும் உலகளாவிய கடல்சார் அமலாக்க முயற்சிகளை நாங்கள் முன்னெடுப்போம் என்பதைத் தெளிவாகக் கூறிக்கொள்கிறோம். தடை செய்யப்பட்ட கப்பல்களுக்குச் சர்வதேசக் கடற்பரப்பு ஒரு புகலிடமல்ல,” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.