முல்லைத்தீவு கேப்பாப்புலவில் தங்களுக்குரிய பூர்விக நிலப்பரப்பை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்க கோரி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (5 ஆம் திகதி) போராட்டமொன்றுக்கு பாதிக்கப்பட்டோர் அழைப்பு விடுத்திருக்கின்றார்கள்
இங்கு 55 பொதுமக்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் காணிகளும் 4 பொதுமக்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் மத்திய வகுப்புக் காணிகளுமாக மொத்தம் 59 பேருக்குரிய 159.5 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் 17 ஆண்டுகாலமாக ஆக்கிரமித்துள்ளார்கள்
விவசாயம் , தெங்குப் பயிர்ச்செய்கை, நன்னீர் மீன்படி என மக்களின் பொருளாதார வாழ்வாதாரத்திற்கு ஆதாரமான மிக வளமான நிலப்பரப்பை ஆக்கிரமித்து அப்பாவி பொதுமக்களை அகதிகளாக வீதியில் நிறுத்தி வைத்திருக்கின்றார்கள்
இதுமட்டுமின்றி இங்கு பாடசாலை, ஆரம்ப சுகாதார நிலையம் , ஆலயங்கள் , தேவாலயம், பொதுநோக்கு மண்டபம் உள்ளிட்ட பொதுமக்களின் குடியிருப்புக்கள் இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் சிக்கியுள்ளன
அதாவது தங்களது பூர்வீக நிலங்களில் குடியேறி சுதந்திரமாக விவசாயம் செய்து வாழ்வதற்கான உரிமையை கோரும் அந்த மக்களின் அடிப்படை உரிமையை இராணுவம் மறுத்து வருகின்றது
மிக முக்கியமாக பலவந்தமாக காணாமலாக்கப்பட்ட பல நூற்றுக்ணணக்கானோர் இங்கே கொ*ன்று புதைக்கப்பட்டு இருக்கலாம் என்கிற வலுவான சந்தேகத்திற்கு மத்தியில் இராணுவம் நில கட்டமைப்பை மாற்றியிருக்கின்றார்கள்
பொதுமக்களின் வீடுகளை அழித்து இருக்கின்றார்கள்
அடையாளம் தெரியாமல் கிணறுகளை மூடியிருக்கின்றார்கள்
புதிய எல்லைகோடுகளை வரைந்துள்ளனர்.
இதுபோததென்று தங்கள் நிரந்தர பயன்பாட்டுக்கென பங்களாக்கள் உட்பட புதிய கட்டடங்களை சட்டவிரோதமாக அப்பாவி பொதுமக்களின் காணிகளில் நிர்மாணித்திருக்கின்றார்கள்
தங்கள் ஆக்கிரமிப்பை அகற்ற மறுக்கும் இராணுவம் காடுகளுக்குள் மாற்று காணி தருவதாக சொல்லுகின்றார்கள்
மறுபுறம் மாற்றுக்காணிகள் கொடுக்கப்பட்டு விட்டதாக தவறான தகவல்களை அறிக்கையிடுகின்றார்கள்
“மக்களின் காணிகள் மக்களுக்கே” என பேசி ஜேவிபி அதிகாரத்திற்கு வந்து இரண்டு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் கூட எந்த மாற்றமும் இல்லை
குறிப்பாக வறுமையான நாட்டில் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிக்க கூடிய வளமான நிலப்பரப்புகளை ஆக்கிரமித்து பொதுமக்களை அகதிகளாக விரட்டி விட்டு பொருளாதாரத்தை முன்னேற்றுவோம் என பேசி கொண்டு இருக்கின்றார்கள்
முல்லைத்தீவு 621,917 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டிருக்கின்றது, இதில் 420,300 ஏக்கர் நிலம் வன வள திணைக்களத்தில் கட்டுப்பாட்டில் இருக்கின்றது .
அந்த வகையில் 201,617 ஏக்கர் மட்டுமே பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இருக்கின்றது
இங்கே பொதுமக்களின் பயன்பாட்டுக்குரிய 201,617 ஏக்கர் நிலப்பரப்பில் 40 % ஐ இராணுவம் உட்பட்ட மத்திய ஒற்றையாட்சி நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளன
விசேடமாக அரச செயலகங்களின் தரவுகளின் படி முல்லைத்தீவில் ஏறத்தாழ 1,578.27 ஏக்கர் காணிகள் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கின்றது
ஆனால் மாவட்ட செயலக தரவுகளுக்கு மேலதிகமான 16,910 ஏக்கருக்கும் அதிகமான தனியார் நிலப்பரப்பை இராணுவத்தினர் ஆக்கிரமித்திருக்கின்றனர் என Oakland Institute உட்பட்ட நிறுவனங்கள் அறிக்கையிட்டு இருக்கின்றன
இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்பில் பொதுமகன் ஒருவருக்கு 2 இராணுவம் என்கின்ற வகையில் இராணுவ கட்டமைப்புகள் செறிவாக்கப்பட்டு நிறுத்தப்பட்டு இருக்கின்றது
இந்த மிக நெருக்கமான இராணுவ ஆக்கிரமிப்பு வலையமைப்புக்குள் கேப்பாபுலவும் சீரழிந்து வருகின்றது
விவசாயம், கடற் தொழில் , விலங்கு வேளாண்மை என எல்லா பொருளாதார தளங்களிலும் பல முனைகளில் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பெருன்பான்மையான மக்கள் வறுமை கோட்டுக்குள் வாழும் முல்லைத்தீவின் பொருளாதார எதிர்காலம் கேப்பாப்புலவு உட்பட்ட பொதுமக்களின் நிலப்பரப்பை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்து உச்சமாக பயன்படுத்துவதில் தான் தங்கியிருக்கின்றது