கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம – கலகஹேன பகுதியில் உள்ள கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் பல தகவல்கள் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம்(15.07.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக கிடந்த குறித்த நபர் கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் ஹோமாகம, பிட்டிபன பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆடைத் தொழிற்சாலையில் முழுநேரப் பணியாளராகவும், பகுதிநேரமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பணியில் ஈடுபட்டு வந்தவராகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் கடந்த 15ஆம் திகதி இரவு 7.00 மணியளவில் பயணியை ஏற்றிச் செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்
சடலம் கண்டெடுக்கப்பட்ட கால்வாய்க்கு அருகில் உள்ள காணியிலேயே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பாதிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிள், தங்கச் சங்கிலி, கைபேசி மற்றும் பணப்பை ஆகியவற்றைத் திருடிய பின்னரே கொலையாளிகள் தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்கேம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில், உயிரிழந்தவருக்கு சொந்தமானதாகக் கருதப்படும் ஒரு ஜோடி காலணிகள் மற்றும் 20 ரூபாய் நாணயத்தாள் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், கழுத்தறுக்கப்பட்டதால் ஏற்பட்ட பலத்த காயங்களே இந்த மரணத்திற்குக் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
கொலையாளிகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் குற்றவாளிகளை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.