ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் பசான் அமரசேன நேற்று (08) பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாக, கொழும்பு தலைமை சட்ட மருத்துவ அதிகாரி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் சந்திரசேனவின் மரணம் தொடர்பில் மரண விசாரணையை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தற்போது பிரேத பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் சந்திரசேனவின் உடல், நேற்று காலை (08) கொள்ளுப்பிட்டி பெட்ரிஸ் வீதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை கொழும்பிலுள்ள தடயவியல் மருத்துவ மற்றும் நச்சுயியல் நிறுவனத்தில் பிரேத பரிசோதனை ஆரம்பமானது.
கொழும்பு நீதவான் நீதிமன்றினால் சந்திரசேனவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய ‘எயார்பஸ்’ (Airbus) கொடுக்கல் வாங்கலில் 2 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக அவர் ஏற்கனவே 54 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் மே 05 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றினால் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
அச்சமயம், சந்தேக நபரை 500,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இருப்பினும், பிணையில் கையொப்பமிடுவதற்காக கபில சந்திரசேன இரண்டு நபர்களுக்கு தலா 15,000 ரூபா பணம் வழங்கியதாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு பின்னர் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
பிணை நிபந்தனைகளை மீறியமைக்காக கபில சந்திரசேனவை வழக்கு முடியும் வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு லஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான், அவரை கைது செய்ய புதிய பிடியாணையை பிறப்பித்தார்.
அந்த பிடியாணைக்கு அமைய, நேற்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்த நிலையிலேயே கபில சந்திரசேன உயிரிழந்துள்ளார்.