ஈ.பி.எஃப் கொடுக்கல் வாங்கல் தகவல்களை வெளியிட முடியாது! மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு
ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு வழங்கிய தீர்மானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இவ்விடயத்தில் இலங்கை மத்திய வங்கியின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டே நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
‘வெரிட்டே ரிசர்ச்’ (Verité Research) நிறுவனம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரச பிணையங்கள் தொடர்பான கொடுக்கல் வாங்கல் குறித்த தகவல்களை கோரியிருந்தது.
குறித்த கொடுக்கல் வாங்கல் இடம்பெற்ற திகதிகள், அவற்றின் செயல்திறன், விலைகள் மற்றும் கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட தரப்பினர் குறித்த விரிவான பதிவுகள் உள்ளிட்ட விபரங்களை அது கோரியிருந்தது.
இது தொடர்பாக மத்திய வங்கி சில பொதுவான தகவல்களை வெளியிட்ட போதிலும், இவை வணிக ரீதியாக உணர்திறன் மிக்கவை என்பதாலும், 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 5(1) பிரிவின் கீழ் உள்ள விதிவிலக்குகளுக்குள் வருவதாலும், விரிவான தகவல்களை வழங்க மறுப்புத் தெரிவித்தது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 5(1)(d) பிரிவின் கீழ், மூன்றாம் தரப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வணிக ரீதியான இரகசியத் தகவல்களைப் பாதுகாப்பதற்கான விதிவிலக்கிற்குள் இந்தத் தகவல்கள் அடங்குவதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
ஊழியர் சேமலாப நிதியத்தின் கொடுக்கல் வாங்கல்கள் குறித்த விரிவான தகவல்களை வெளிப்படுத்துவதன் மூலம் நிதியத்தின் மூலோபாயங்கள் பகிரங்கப்படும் என நீதிமன்றம் அவதானித்துள்ளது.
இதன் மூலம் அரச பிணையங்கள் ஏலத்தில் சந்தையிலுள்ள ஏனைய தரப்பினர் முன்கூட்டியே எதிர்வுகூறல்களை மேற்கொண்டு தந்திரோபாய ரீதியில் ஏலங்களை சமர்ப்பிக்க முடியும்.
இது இறுதியாக மில்லியன் கணக்கான சந்தாதாரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நிதியத்தின் போட்டித்தன்மை மற்றும் இலாபமீட்டலைக் குறைக்கும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
நிதியத்தின் சொத்துக்களைப் பாதுகாப்பதில் மத்திய வங்கிக்குள்ள பொறுப்பை வலியுறுத்திய நீதிமன்றம், இவ்வாறான உணர்திறன் மிக்க நிதித் தகவல்களை வெளியிடுவது நிதியத்தின் சந்தை ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது.
நிதியத்தின் வெளிப்படைத்தன்மையானது வருடாந்த அறிக்கைகள், கணக்காய்வாளர் நாயகத்தின் தணிக்கை மற்றும் பாராளுமன்ற மேற்பார்வை போன்ற சட்டரீதியான பொறிமுறைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொது நலன் சார்ந்த விடயத்தில், இந்தத் தகவல்களை வெளியிடுவதால் கிடைக்கும் நன்மைகள், ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் அதன் உறுப்பினர்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை விடவும் அதிகம் என்பதை நிரூபிக்க மனுதாரர் தவறிவிட்டதாகவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் முடிவெடுத்துள்ளது.