இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய செஸ் (சதுரங்க) சாம்பியன்ஷிப் போட்டியின் முதன்மை விருந்தினராக அதன் ஆரம்ப விழாவில் கலந்துகொள்வதற்காக, உலக செஸ் கூட்டமைப்பின் (FIDE) தலைவர் அர்காடி டிவோர்கோவிச் (Arkady Dvorkovich) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக இலங்கை வந்தடைந்தார். இப்பொதுநலவாய செஸ் போட்டி மே 16 ஆம் திகதி முதல் மே 26 ஆம் திகதி வரை 14 பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த 550 வீர வீராங்கனைகளின் பங்கேற்புடன் களுத்துறை, வஸ்கடுவயில் அமைந்துள்ள “சிட்ரஸ்” (Citrus) ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
தலைவர் அர்காடி டிவோர்கோவிச், ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இருந்து ரஷ்ய “ஏரோஃப்ளோட்” (Aeroflot) விமான சேவைக்குச் சொந்தமான SU-288 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை மே 16 ஆம் திகதி காலை 07.40 மணியளவில் வந்தடைந்தார். அவரை வரவேற்பதற்காக இலங்கை செஸ் கூட்டமைப்பின் தலைவர் லக்ஷ்மன் விஜேசுரிய, பொதுநலவாய செஸ் கூட்டமைப்பின் தலைவர் பாரத் சிங் உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் “கோல்ட் ரூட்” (Gold Route) விசேட விருந்தினர் வரவேற்புப் பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.