இலங்கைப் பிரஜைகளின் உயிரியல் அடையாளத் தரவுகளை உள்ளடக்கிய மின்னணு அடையாள அட்டைத் திட்டத்தை வெளிநாட்டு நிறுவனத்திடம் கையளிப்பதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் பிரஜைகளின் தனிப்பட்ட தகவல்களுக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் போராட்ட இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை (28) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயிரியல் அடையாளத் தரவுகளை இந்தியாவுக்கு வழங்குவது குறித்த உள்ளகக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவ்வியக்கத்தின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினரான வசந்த முதலிகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் 2012 ஆம் ஆண்டில் உயிரியல் அடையாளத் தரவு அட்டைக் கருத்துப்படிமம் முதன்முதலாக முன்வைக்கப்பட்டது. 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க நபர்கள் பதிவெழுத்தல் சட்டத்தில் உயிரியல் அடையாளத் தரவுகளைப் பெற சட்ட ஏற்பாடுகள் இல்லாததால், 2016 ஆம் ஆண்டில் மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்காலத்தில் அச்சட்டம் திருத்தப்பட்டு நிழற்படம் மற்றும் விரல் அடையாளங்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பின்னர் 2019 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ, 2020 நவம்பர் 16 அன்று அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி இத்திட்டத்தை மீண்டும் ஆரம்பித்தார். 2021 ஆம் ஆண்டில் இதற்கான 20 பில்லியன் ரூபா மொத்தச் செலவில் 10 பில்லியன் ரூபாவை கடனுதவியாக வழங்க முன்வந்த இந்திய அரசு, இந்திய நிறுவனங்களை மட்டுமே இதில் இணைக்குமாறு நிபந்தனை விதித்தது. 2022 இல் முன்வந்த சில இந்திய நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் இருந்தமையினாலும் சமூக எதிர்ப்பினாலும் அச்செயல்முறை நிறுத்தப்பட்டது. பின்னர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக் காலத்தில் அரச திறைசேரியிலிருந்து 3 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போதைய அநுர குமார திசாநாயக்க அரசு 2025 ஏப்ரல் 5 ஆம் திகதி இந்திய அரசுடன் மின்னுரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
இதனைத் தொடர்ந்து, நபர்கள் பதிவெழுத்தல் திணைக்களத்தின் மூலம் 5.6 பில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட மின்னணு தேசிய அடையாள அட்டைத் திட்டத்தின் அலுவலகங்கள் 2025 மே-ஜூலை காலப்பகுதியில் முற்றாக மூடப்பட்டு முத்திரையிடப்பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய அரசு கோரிய விலைமனுகோரலின்படி, தேர்வு செய்யப்படும் ஒரு இந்திய நிறுவனம் 1 வருட காலம் இலங்கையில் தங்கியிருந்து இத்திட்டத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் பெறவுள்ளது. இதன் கீழ் 2 பாரிய தரவு மையங்களை இலங்கைக்குள் அமைத்தல், அடிப்படை மென்பொருளை உருவாக்குதல் மற்றும் தீவு முழுவதும் உள்ள 900 மையங்களில் 900 வருடி இயந்திரங்களை நிறுவுதல் ஆகிய பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
விரல் அடையாளங்கள், கண் விழித்திரை, முக அமைப்பு, குரல் மற்றும் மரபணு போன்ற உணர்திறன்மிக்க உயிரியல் அடையாளத் தரவுகள் வெளிநாட்டு நிறுவனத்திடம் செல்வது பொருளாதாரச் சுரண்டல், அரசியல் செல்வாக்கு செலுத்துதல் மற்றும் மூடிய சுற்றுத் தொலைக்காட்சி, ஆளில்லா வானூர்திகள் ஊடாக வெகுஜனப் போராட்டங்களை அடக்கும் ஒரு கண்காணிப்பு அரசை உருவாக்கும் பாரிய ஆபத்தைக் கொண்டுள்ளது. அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, ஜேர்மனி மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் கூடத் தவிர்க்கும் இத்தகைய ஆபத்தான திட்டத்தைக் கைவிட்டு, தேசிய இறையாண்மையைப் பாதுகாக்க பொதுமக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும் என்றார்.