வருடாந்த இடமாற்றங்களைப் பெற்ற ஆசிரியர்களை உரிய பாடசாலைகளில் பொறுப்பேற்க அனுமதிக்காவிட்டால், வடமாகாண ஆளுநர் செயலகத்தை முடக்கிப் போராட்டம் நடத்தப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உத்தரவு: “சேவையின் தேவை” என்ற பெயரில் வடமாகாண ஆளுநர் மேற்கொண்ட ஆசிரியர் இடமாற்றங்கள் தவறானவை எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அந்த இடமாற்றங்களைத் தற்காலிகமாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வருடாந்த இடமாற்றத்தில் வரவேண்டியுள்ள நிலையில், ஆளுநரின் தன்னிச்சையான செயற்பாடுகளால் ஆசிரியர்களிடையே முரண்பாடுகள் தோற்றுவிக்கப்படுவதாகத் தீபன் திலீசன் குற்றம் சாட்டினார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஆகியோர் இந்த இடமாற்றத்தில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டியும் ஆளுநர் அவற்றைச் சீர் செய்யவில்லை என அவர் தெரிவித்தார்.
பாடசாலை விடுமுறை முடிந்து மீண்டும் ஆரம்பமாகும் நாளில், இடமாற்றச் சபையினால் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பாடசாலைகளைப் பொறுப்பேற்க அனுமதிக்கப்பட வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குத் தொடரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் இத்தகைய செயற்பாடுகளால் வடக்கின் கல்வித் துறை சீரழிந்து வருவதாகச் சுட்டிக்காட்டிய ஆசிரியர் சங்கம், ஆளுநர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.