சென்னை:
“நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) திடீர் எழுச்சியால் தான் அதிமுகவின் பெரும்பான்மையான வெற்றி வாய்ப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுப் பறிபோயின” என்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் கூட்டாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்புக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் முற்றி வரும் சூழலில், சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. உள்கட்சிப் பூசல்களுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த முக்கியக் கூட்டத்தில், மொத்தமுள்ள 82 மாவட்டச் செயலாளர்களில் 72 பேர் பங்கேற்றனர். காலை 8:30 மணிக்கே தொண்டர்கள் வருவதற்கு முன்பாகவே எடப்பாடி பழனிசாமி அலுவலகம் வந்து சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நீடித்தது.
கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அரசியல் பதவி ஆசைக்காகச் சிலர் இந்த இக்கட்டான நேரத்தில் கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டுப் போய்விட்டார்கள். இயக்கத்திற்குத் தேர்தல் வெற்றி, தோல்வி என்பது சகஜமான ஒன்றுதான். இந்தச் சோதனையான காலத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக, ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தேர்தல் தோல்வி குறித்து விரைவில் மாவட்டவாரியாகத் தனித்தனியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி விவாதிக்க உள்ளேன்” என்று உருக்கமாகப் பேசினார். கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர்கள், தங்களது மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் இபிஎஸ்-க்கு முழு ஆதரவு தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானக் கடிதங்களை அவரிடம் நேரில் வழங்கினர்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் குமரகுரு, “அதிமுகவின் தோல்விக்குத் தமிழக வெற்றிக் கழகம் தான் முழு முதற்காரணம்; அவர்களின் வருகையால் வாக்குகள் பிரிந்து வாய்ப்பு பறிபோனது” என்றார். தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “யாரும் கணிக்க முடியாத தீர்ப்பை மக்கள் கொடுத்துள்ளார்கள். அதற்குத் தலைவணங்கிச் சிறந்த எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம். இன்று தவெக தரப்பிலிருந்து பல பேருக்குப் பல ஆஃபர்கள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் தொண்டர்கள் தெளிவாக உள்ளனர். ஜெயலலிதா காலத்தில் இருந்தது தான் உண்மையான அமைச்சர் பதவி” என்று தவெக அமைச்சரவையைச் சாடினார். மாநிலங்களவை எம்பி தனபால் மற்றும் வேலூர் அப்பு ஆகியோரும் இபிஎஸ்-க்கு தங்களது ஒற்றை தலைமை ஆதரவை உறுதிப்படுத்தினர்.
#EdappadiPalaniswami #ADMK_Meeting #RoyapettahHeadquarters #BreakingNews #May19 #ADMK_VsTVK #VelumaniVsEPS #CVShanmugam #ThalapathyVijay #TVK_Government #NewGovernmentTN #RPUdhayakumar #KumaraguruADMK #TN_Politics2026 #DravidianCrisis #EpsSupports #OppositionRole #TamilNews #VijayMakkalIyakkam #CM_Vijay_Official_“`