யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான சிறுவன் அருள் பயஸின் படுகொலைக்கு நீதி கோரி, ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்ற போது அவரை சந்திக்க விடாமல் எங்களை தடுத்து விட்டார்கள் என சிறுவனின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கடந்த மாசி மாதம் 10 ஆம் திகதி வேலணை அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சிறுவன் அருள் பயஸ் உயிரிழந்திருந்தார்.
ஆனால் இதுவரை எமது மகனுக்கான நியாயம் கிடைக்காதிருப்பதுடன் குடும்பத்தினர் மீதும் பலியான சிறுவன் மீதும் பொய்யான தகவல்களைக் கூறி சமூக ஊடகங்களில் அவமானப்படுத்தி வருகின்றனர். எனது குடும்ப நிலையும் வேதனையும் எமக்கு தான் தெரியும்.
நீதிமன்று எமக்கான தீர்வை பெற்றுத்தரும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் பொலிசார் சிறுவனின் மரணம் தொடர்பில் உண்மைகளை மறைக்கின்ற முயற்சியில் கடுமையாக ஈடுபட்டு வருகின்றனர். எம்மை எமது செயற்பாடுகளை நாளும் கண்காணித்து எமக்கு அச்சுறுத்தல் கொடுக்கின்றனர்
இந்நிலையில், நாம் ஜனாதிபதிக்கு நிலமையை எடுத்துச் செல்ல கொழும்பு சென்றிருந்தோம். ஆனால் எம்னை அங்கு மனிதராக கூட மதிக்காது அவமதித்தனர்.
இதேவேளை, எமது இல்லத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வந்து நிலமைகளை கேட்டறிந்து நியாயம் பெற்றுத்தருவதாக கூறியிருந்தார்.
ஸ்ரீதரன் எம்.பி வீட்டுக்கு வரவில்லை. ஆனால் எது மகனின் கொலைக்கு நியாயம் வேண்டும் என நாடாளுமன்றில் பேசியிருந்தார். அவர் செய்ததைக் கூட ஆளும் தரப்பில் இருக்கும் இந்த இளங்குமரன் எம்.பி செய்யவில்லை.
இவர்களை எல்லாம் நாம் மக்கள் பிரதிநிதிகள் என்று எவ்வாறு நம்ப முடியும். எனவே எமது மகனின் கொலைக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்ய அனைவரும் முன் வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளனர்.