மொன்றியலில் திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி அடையாளம் காணப்பட்டுள்ளார். இதேவேளை, பொலிஸாரைக் குறிவைத்து வன்முறையைத் தூண்டும் வகையிலான “பொலிஸ் எதிர்ப்பு கொள்கை பிரகடனம்” (Anti-police manifesto) ஒன்று வலம்வரக்கூடும் என ஏனைய பாதுகாப்புப் படையினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட அதிகாரி 34 வயதுடைய முகமது லமீன் பென்ரெடோவான் (Mohamed Lamine Benredouane) என்றும், அவர் 2021 முதல் இத்துறையில் பணியாற்றி வந்தவர் என்றும் மொன்றியல் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். கோட்-டெஸ்-நெய்ஜஸ் (Côte-des-Neiges) மாவட்டத்தில் உள்ள ஹில்டன் ஹோட்டல் நுழைவாயிலுக்கு அருகில் சந்தேக நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் பலியானார்.
இச்சம்பவத்தில் சந்தேக நபர் மற்றும் ஒரு பொதுமக்கள் (சிவிலியன்) கொல்லப்பட்டதுடன், இரண்டாவது பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கொல்லப்பட்ட பொதுமகன் ‘மைக்கேல் மோஷே மிஸ்ராஹி’ (Michael Moshe Mizrahi) என இஸ்ரேல் மற்றும் யூத விவகாரங்களுக்கான மையம் (CIJA) அடையாளம் கண்டுள்ளது.
நாடு தழுவிய பாதுகாப்பு எச்சரிக்கை
இந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் கொலம்பியா (BC) மாகாணம் முழுவதும் உள்ள பாதுகாப்புப் படையினருக்கு பொலிஸ் எதிர்ப்பு கொள்கை பிரகடனம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரோயல் கனடியன் மவுண்டட் பொலிஸின் (RCMP) பிரிட்டிஷ் கொலம்பியா தலைமையகத்தில் உள்ள உளவுத்துறைப் பிரிவினால் இந்தத் தகவல் பகிரப்பட்டதாக, சுரே பொலிஸ் சேவையின் (Surrey Police Service) அதிகாரி லிண்ட்சே ஹவ்டன் (Lindsey Houghton) தெரிவித்துள்ளார். பொலிஸ் அதிகாரிகளைக் குறிவைத்து வன்முறையில் ஈடுபடுமாறு தூண்டும் ஆவணங்கள் அல்லது கொள்கை பிரகடனங்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் நடந்தது என்ன?
ஹில்டன் ஹோட்டல் ஜன்னல் வழியாக ஒருவர் துப்பாக்கியை நீட்டிக்கொண்டிருப்பதாக முற்பகல் 11:35 மணியளவில் 911 அவசர இலக்கத்திற்கு அழைப்பு வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றடைந்ததும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
“இது ஒரு மிக மோசமான நாள், ஒரு கனாக்கனவு” என்று ஊடகவியலாளர்களிடம் உணர்ச்சிவசப்பட்டுக் கூறிய மொன்றியல் பொலிஸ் மா அதிபர் ஃபாடி டஹர் (Fady Dagher), மொன்றியலில் கடமையின் போது பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டு 24 ஆண்டுகள் ஆகின்றன என்றார். காயமடைந்த இரண்டாவது அதிகாரி தற்போது சீரான நிலையில் உள்ளதாகவும், நீளக் குழல் துப்பாக்கியுடன் இருந்த சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இதில் இரண்டாவது சந்தேக நபர் எவரும் இல்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில், ஒலிவ் நிற ஜாக்கெட் மற்றும் கார்கோ காற்சட்டை அணிந்திருந்த நபர், நீளக் குழல் துப்பாக்கியால் பொலிஸாருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபடுவது பதிவாகியுள்ளது. இந்த மோதலில் ஒரு பொதுமகன் மற்றும் இரண்டு அதிகாரிகள் சுடப்படுவதும், சந்தேக நபர் தனது துப்பாக்கியை மீள்நிரப்பும்போது (Reload) சுடப்படுவதும் அதில் தெரிவதாகக் கூறப்படுகிறது.
அவசரகால முடக்கம்
ஆயுதமேந்திய நபர் நடமாடுவதால் குடியிருப்பாளர்களை வீடுகளுக்குள் இருக்குமாறு (Shelter in place) மொபைல் போன்கள் மூலம் அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் டெகாரி அதிவேக நெடுஞ்சாலை (Décarie expressway) மற்றும் இரண்டு மெட்ரோ ரயில் பாதைகளின் முக்கிய பகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டன. சந்தேக நபர் இறந்துவிட்டதை உறுதிசெய்த பின்னர், பிற்பகல் 3 மணியளவில் இந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
பயங்கரவாதத் தாக்குதல் அல்ல
மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கியூபெக் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் இயன் லஃப்ரினியர் (Ian Lafrenière) பேசுகையில், இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என்று புலனாய்வாளர்கள் முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பரவும் துப்பாக்கிச் சூட்டு காணொளிகளை, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மதிப்பளித்து பகிர வேண்டாம் என அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார். மேலும், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில்தான் அந்தப் பொதுமகன் கொல்லப்பட்டதாக வெளியாகும் வதந்திகள் குறித்து இப்போதைக்குக் கூற முடியாது என்றும், கியூபெக்கின் சுயாதீன பொலிஸ் கண்காணிப்பகமான BEI (Bureau des enquêtes indépendantes) இது குறித்து விசாரிக்கும் என்றும் அவர் கூறினார்.
இச்சம்பவத்தை அடுத்து கியூபெக் மாகாணக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என மாகாண முதல்வர் கிறிஸ்டின் பிரேச்செட் (Christine Fréchette) மற்றும் மொன்றியல் மேயர் சொரயா மார்டினெஸ் ஃபெராடா ஆகியோர் அறிவித்துள்ளனர்.