அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக, புதிய நாணயத்தாள்களில் ஜனாதிபதியின் கையெழுத்தைச் சேர்க்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அமெரிக்கச் சுதந்திரத்தின் 250ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் திட்டத்தின் ஒரு பகுதியாக, விரைவில் வெளியிடப்படவுள்ள புதிய டொலர் தாள்களில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கையெழுத்து இடம்பெறும் என அந்நாட்டுத் திறைசேரி அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக ஜூன் மாதத்தில் புதிய 100 அமெரிக்க டொலர் தாள்கள் அச்சிடப்படவுள்ளன. இதில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) ஆகியோரின் கையெழுத்துகள் இடம்பெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து, அடுத்த சில மாதங்களில் ஏனைய பெறுமதியிலான டொலர் தாள்களும் இதே மாற்றங்களுடன் வெளியிடப்படவுள்ளன.
இது குறித்து நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கருத்துத் தெரிவிக்கையில்:
“இந்தத் திட்டம் அமெரிக்காவின் வலுவான பொருளாதார முன்னேற்றத்தைப் பறைசாற்றுவதுடன், நாட்டின் 250ஆவது சுதந்திர தினத்தை நினைவுகூரும் ஒரு வரலாற்றுச் சாதனையாக அமையும். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்களைக் கௌரவிக்கும் விதமாகவே அவரது பெயர் மற்றும் கையெழுத்து நாணயத்தாள்களில் இடம்பெறுகின்றது.”
தற்போது புழக்கத்தில் உள்ள டொலர் தாள்களில், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் காலப்பகுதியில் நியமிக்கப்பட்ட நிதித்துறைச் செயலாளர் ஜனெட் யெலன் (Janet Yellen) மற்றும் அமெரிக்கப் பொருளாளர் லின் மலர்பா (Lynn Malerba) ஆகியோரின் கையெழுத்துகளே தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.