மட்டக்களப்பு நகர் பகுதியில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர்ச்சியான மழை காரணமாக இந்நோய் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகள்: கொக்குவில் பகுதியில் 12 பேரும், கோட்டமுனை பகுதியில் 6 பேரும் என மொத்தம் 18 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குடன் இணைந்து சிக்கன் குனியா நோய் தாக்கமும் இப்பகுதிகளில் பதிவாகி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 3 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ. உதயகுமார் தலைமையில் வியாழக்கிழமை (5) விசேட சோதனையிடல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதில் பொது சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸார், மாநகரசபை ஊழியர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் எனப் பல தரப்பினர் ஒன்றிணைந்து வீடுகளைச் சோதனையிட்டனர்.
வைத்தியர் உதயகுமார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் பின்வருவனவற்றை வலியுறுத்தினார், “நோய் பரவும் இடங்களை அழிப்பதன் மூலமே இதைக் கட்டுப்படுத்த முடியும். பொதுமக்கள் தங்கள் வீடுகள், வளவுகள் மற்றும் நீண்டகாலமாகப் பூட்டியிருக்கும் வீடுகளின் உரிமையாளர்கள் உடனடியாகத் துப்புரவுப் பணிகளை முன்னெடுத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.”
பராமரிப்பின்றி உள்ள வெற்றுக் காணிகளை அதன் உரிமையாளர்கள் உடனடியாகச் சுத்தப்படுத்த வேண்டும். நுளம்பு குடம்பிகள் பெருகும் வகையில் நீர் தேங்கியுள்ள இடங்களை அகற்ற வேண்டும். டெங்கு மற்றும் சிக்கன் குனியா ஆகிய இரண்டுமே நுளம்புகளால் பரவுவதால், பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு இன்றி இதனை ஒழிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.