கடந்த கால அரசாங்கங்களின் போது தலைவர்களால் வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பணம் குறித்து, சம்பந்தப்பட்ட நாடுகளின் ஆதரவுடன் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தேசிய மக்கள் சக்தி (NPP) நேற்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா செய்தியாளர் சந்திப்பொன்றில் உரையாற்றுகையில், விசாரணைகளின் பின்னர் பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ள நாடுகள், நபர்கள் மற்றும் அதன் அளவு குறித்த அனைத்து விபரங்களையும் வெளிப்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் வெளிநாடுகள் இந்த விசாரணைகளுக்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அவர் கூறினார்.
“விசாரணைகளை முன்னெடுப்பதற்கு வெளிநாடுகள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்றன. முன்னைய அரசாங்கங்கள் விசாரணைகளை நடத்த எந்த நாடும் ஆதரவளிக்கவில்லை. ஆனால் இம்முறை அவர்கள் எமக்கு உதவுகிறார்கள். இந்த ஆதரவின் காரணமாகவே எம்மால் பல பாதாள உலகக் குழுவினரை நாட்டுக்கு அழைத்து வர முடிந்தது,” என்று அவர் குறிப்பிட்டார்.
உகாண்டா போன்ற நாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பணம் மற்றும் அதன் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“முந்தைய ஆட்சியாளர்களின் காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். பல்வேறு மோசடி மற்றும் ஊழல் நடவடிக்கைகள் மூலம் ஈட்டப்பட்ட பணம் பல்வேறு நாடுகளில் குவிக்கப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம்,” என அவர் மேலும் தெரிவித்தார்.