பொதுப்பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட உயர்மட்ட வழக்கு ஒன்றில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன, கடந்த புதன்கிழமை (29) நீதிமன்றத்தில் அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ரணிலின் “தனியார்” வெளிநாட்டுப் பயணத்தின் போது, இங்கிலாந்திலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் ஒரு தனியார் பயண நிறுவனம் இணைந்து, செலவுகளைக் கடுமையாக உயர்த்தி மோசடி செய்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
பிணையில் உள்ள ரணில் விக்ரமசிங்க, உடல்நலக்குறைவு காரணமாக நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில், செலவிடப்பட்டதாகக் கூறப்படும் 16.6 மில்லியன் ரூபாவிற்கு அவர் பொறுப்பல்ல என்று மாரப்பன கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
“16 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகக் கூறுகிறார்கள். நாங்களும் உத்தியோகபூர்வ பயணங்களை மேற்கொண்டுள்ளோம். யார் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதை நாங்கள் கண்காணிப்பதில்லை, ஆனால் இவ்வளவு பெரிய தொகை ஏன் செலவிடப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். வாகனங்கள் பிரித்தானிய அரசாங்கத்தால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், வாகனச் செலவு மட்டும் 3 மில்லியன் ரூபா எனக் காட்டப்பட்டுள்ளது. எனது கட்சிக்காரர் அந்த வாகனங்களைப் பயன்படுத்தவில்லை. குறிப்பிடப்பட்ட ஹோட்டல் இங்குள்ள ரேணுகா ஹோட்டலைப் போன்ற ஒரு சிறிய ஹோட்டலாகும். உணவிற்காக 2 மில்லியன் ரூபா செலவானதாகக் கூறுகிறார்கள்; ஒரு நபர் ஒரு மாதத்திற்கு கூட 2 மில்லியன் ரூபாவை உணவிற்காகச் செலவிடுவதில்லை. இது ஒரு கொள்ளை. ஸ்கைவிங்ஸ் (Skywings) என்ற நிறுவனம் இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்தது. பணத்தைச் சுருட்டுவதற்காகப் புனைந்துரைக்கப்பட்ட எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தூதரகத்துடன் இணைந்து இந்த நிறுவனம் மோசடி செய்துள்ளது. இது குறித்துத் தனி விசாரணை தேவை.” என மாரப்பன வாதிட்டார்.
இதற்குப் பதிலளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ், எவருக்கும் பொதுப்பணத்தை தன்னிச்சையாகத் தவறாகப் பயன்படுத்தும் சுதந்திரம் இல்லை எனத் தெரிவித்தார்.
“திவாலான ஒரு நாட்டில் பொதுப்பணம் எவ்வாறு சுருட்டப்பட முடியும்? பொதுப்பணத்தை விருப்பப்படி துஷ்பிரயோகம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை. இந்த ‘டிரான்சிட்’ (பயண இடைத்தங்கல்) என்பது ஒரு அசாதாரணமான ஒன்றாகும். இந்த இடைத்தங்கலின் போது ஒரு விருந்து உபசாரமும் நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் லண்டனிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர். 32 மணிநேரத்தில் 16.2 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. கனம் நீதவான் அவர்களே, இது முழுமையாக முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு பயணம்.” என அவர் சுட்டிக்காட்டினார்.
2023 செப்டம்பரில் ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவிற்கு வொல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் (University of Wolverhampton) வழங்கிய கௌரவப் பேராசிரியர் பட்டத்துடன் தொடர்புடைய இங்கிலாந்து பயணத்திற்காக, பொதுப்பணத்தைத் திசைதிருப்பியதாக ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது